திங்கள், 6 டிசம்பர், 2010

அண்ணனுக்கு அன்னை!


அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்....!


நன்றி - அறிவுமதி

திங்கள், 22 நவம்பர், 2010

துகிலுரியும் துச்சாதனர்களின் தலை கொய்வோம்!



அதிகாரம் கொண்ட அந்நியர்களின்
கோரப் பிடிக்குள் அகப்பட்ட
அபலைகளின் வாழ்வு - இன்று
கண்ணீரால் சூழப்பட்டும்
கவலைகளால் நிரப்பப்பட்டும்
யாரும் தேடுவாரற்றுக் கிடக்கிறது!


வலுக்கட்டாயமான
பாலியல் இம்சைகளுக்குள்
வலிந்து தள்ளப்படும் - எம்
வனிதையர் வாழ்வு கண்டு
வளர்ந்து வரும் எம் இளநெஞ்சம்
கொதியாய் கொதிக்கிறது!
ஏ! சமுதாயமே! இன்னும்
எத்தனை காலங்களுக்குத் தான்
உன் கண் முன்னால் நடக்கும்
அநியாயங்களையும் அக்கிரமங்களையும்
கண் கட்டி வாய் பொத்தி
மௌனியாய் பார்த்திருக்கப்
போகிறாய்...?


உரிமைகள் தர மறுத்ததால்
உன் உணர்வுகளும் ஒன்றாக
பலிக்கடா ஆக்கப்பட்டு
விட்டதா...?


எங்களுர்ச் சீதைகள்
மாற்றான் தோட்டத்து மல்லிகையாக
மணம் பரப்பினால்
எம்மூர் ராமர்களின் நிலை
என்னாவது ...?


எம் வாழ்வின் வசந்தங்களை
எவனோ ஒருவன் வலுக்கட்டாயமாக
அனுபவித்துப் போக
இன்னும் எத்தனை காலங்கள் தான்
நாம் அனுமதி வழங்கிக்
காத்திருப்பது...?


எங்கள் உடன்பிறந்தவர்களின்
உயிரணுக்குள்
இரத்த சம்பந்தமே இல்லாத
எங்களின் நிரந்தர எதிரிகள் உடலில்
ஐக்கியமாக விட்டு விட்டு
அடங்கிக் கிடக்க நாமென்ன
ஆண்மையற்ற பேடிகளா?


செம்மணியில் அன்று கிருஷாந்தி
வேலணையில் இன்று தர்ஷிகா
நாளை யார் யாரோ!


இவர்கள் அனுபவித்த அவலநிலை
நாளை எங்கள் உறவுகளுக்கு
ஏற்படாது என்பதற்கு
என்ன தான் இங்கு உத்தரவாதம்?


கல்யாணக் கனவுகளை கண்களில் சுமந்து
அகதி முகாம்களில் அடைக்கலம்
தேடிய அரிவையர் வாழ்வு
காமுகரின் காமத்தனத்தால்
களவாடப்பட்டதால் கனவாய் போன
காரிகையர் வாழ்வை
ஒரு கணம் நினைத்து பார்த்தாயா...?


என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் சொந்தங்கள்... ?
இனியும் வேண்டாம்
எம் குலப் பெண்களுக்கு
இப்படியொரு இழி நிலை

வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சும் வகையில்
செயற்படும் துகிலுரியும்
துச்சாதனர்களின் தலை கொய்யும்
தருணம் வந்து விட்டது!


தையலரின் விழிநீர் துடைக்க
தமிழுணர்வுள்ள நாமனைவரும்
ஒன்றிணைவோம்!


தமிழ் மங்கைகளின் தன்மானம்
மண் மீதினில் என்றும்
நிலை பெற வழி செய்வோம்!


-ஆக்கம் - செல்வநாயகம் ரவிசாந்-

திங்கள், 8 நவம்பர், 2010

இடம்பெயர்ந்தோர் என்று...


பண்பும் பாசமும் புற்றெடுத்து
பருவ காலங்கள் தோள் சுமந்து
இன்பம் துன்பம் இரண்டுடனும்


இல்லறத்தில் நாமிணைந்து
இருவர் நாமும் பெற்றெடுத்த
மழலையுடன் மனக் கோட்டையை
மாளிகையாய் கட்டிவைத்து


தினம் தினம் கோலமிட்ட கனவுகளை
நனவாக்க காத்திருந்தோம் பல காலம்,
ஆனாலும் அவை யாவும் ஒருநாளில்
செல்லரித்தது போலச்
செல்லடித்து வீழ்ந்ததுவே!


கனவெல்லாம் கனவேயாகிக்
காணாமல் போனது போல்;
நினைவினிலே நீயும் நானும்
நிஜத்தோடு போரிடமுடியாது;


பெட்டி படுக்கையும் கையுமாய்
நிழல் தேடி நடக்கின்றோம்
கனவெல்லாம் நனவாகுமென்ற
கனமான நம்பிக்கையுடன்...

வியாழன், 4 நவம்பர், 2010

தீர்வு ஒன்று தந்துவிடு தீபத் திருநாளே!


தீப ஒளி ஏற்றிடும் தீபத் திருநாளே!
சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்
சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து
நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே
தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க
திக்கெல்லாம் நம் புகழ் தித்தித்து ஒலிக்க
தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்
அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்
சண்டைகள் யாவும் ஒழிந்து
சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்
பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்
பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்
பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி
பாரில் இன்பம் கொண்டு வாராய்!
அவனியில் தமிழர் எங்கள்
அவலங்கள் யாவும் அகன்றிட
மலர்ந்திடுவாய் தீபத்திருநாளே!

அகதிகளாய் அனாதைகளாய்
அவதியுறும் அனைவருக்கும்
அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு
ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு
அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி
அகிலத்தில் ஆனந்தமாய் நம் வாழ
அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!

கவியாக்கம் - செல்வநாயகம் ரவிசாந்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கிரிக்கெட்டில் ஓர் முடி சூடா மன்னன்!



சுழல் பந்து வீச்சு
முரளிதரன் வாழ்வில்
இது தந்தது
மிகப்பெரும் எழுச்சி!


தொடமுடியாத சிகரங்களை
தொட்ட முதல் வீரன்
மட்டுமா எங்கள் முரளி?


கிரிக்கெட் உலகினில்
கொடி கட்டிப்பறந்ந
முதல் தமிழனும் கூட....!


தூஸ்ரா சர்ச்சையை
துணிவுடன் எதிர்கொண்டு
சோதனைக் களங்களை
சாதனைக் களங்களாக
மாற்றிக் காட்டியவன்!


சர்வதேச அளவில்
தனது அணியை
தலை நிமிரவைக்க
தூண்டு கோலாய் அமைந்த
முரளியின் உலக சாதனையை
முறியடிக்க இனி
எவரால் முடியும்?

சதத்திற்கு ஒரு சச்சின்
அதிரடிக்கு ஒரு செவாக் என்றால்
சுழல் பந்து வீச்சுக்கு உலகில்
ஒரே ஒரு முரளி மட்டும் தான்!


எங்கு பழகி கொண்டாயோ
இப்படி ஒரு வித்தையை?


எறிந்தால் போதும் ஒரே நாளில்
பல விக்கெட்டுகள் காலில்
எண்ணூறு விக்கெட்டுகள் என்ற
உனது இமாலய சாதனை
எங்கள் நாட்டுக்கு கிடைத்த
மிக பெரிய உலக அங்கீகாரம்

ஓய்வு பெறும் உன் அறிவிப்பு
உனது இரசிகர்களிடையே இதனால்
நீடிக்கின்றது ஒரு வித பரபரப்பு


கிரிக்கெட் உலகினில்
தலை சிறந்த உன் பந்து வீச்சை
மீண்டும் காண எம் கண்கள்
நீண்ட தவமிருகின்றன ...


தடைகளை தகர்த்து
தனக்கென தனி முத்திரை பதித்த
முரளியே கிரிக்கெட் சாம்ராஜியத்தில்
நீதான் என்றும் முடி சூடா மன்னன்!


கடலைகள் ஓய்ந்தாலும்
உனது சாதனைப்பயணம்
ஓயாது தொடர கோடான கோடி
உனது இரசிகர்கள் சார்பாக
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உனக்குப் பல கோடி ...


செல்வநாயகம் ரவிசாந்

புதன், 29 செப்டம்பர், 2010

என்னதான் 'தவறு'..?


எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை.
இயந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக்
காட்டிலும் எமது உயிர்கள் குறைவான மதிப்பை
உடையனவாகவே இருந்தன.
நாங்கள் கற்களைப் போல,
சாலையோரத்துக் களைச்செடிகள் போல இருந்தோம்.

எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன.
நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம்.
நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை.
நாங்கள் உயிர்வாழவே இல்லை.

எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால்
நாங்கள் ஆயுதங்களை ஏந்தவேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால்
எங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால்
எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால்
எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.

எனவேதான் நாங்கள் போராளிகளானோம்.
எமது மக்கள் சாவதை
எமது மக்கள் ஏமாற்றப்படுவதை
இனியும் நாங்கள்விரும்பவில்லை,
நாங்கள் மறக்கப்படுவதை
இனியும் நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால்
எங்கள் ஆயுதமேந்திய குரலுக்குப் பின்னால்
பெயர்சொல்லி அழைக்க முடியாத
எங்கள் பெயருக்குப் பின்னால்
நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால்
நாங்கள் உண்மையில் நீங்களேதான்.

(நன்றி: எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்)

[இழந்துவிட்ட உரிமைகளை, மறுக்கப்பட்ட சுதந்திரங்களை மீட்பதற்கு உயிரையும் ஆயுதமாக்கிப் போனவர்களின் நினைவாக...]

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

தீர்த்தமாடி எம் வினை தீர்த்தருள்வாய்!

23/09/2010 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவையொட்டி எழுதப்பட்டு உதயன் நாளிதழில் பிரசுரமான கவிதை அப்படியே வலைப்பதிவு நண்பர்களுக்காக....

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

என்னைச் சுற்றியுள்ள பெண்கள்!


அம்மா

உயிர் உலுக்கி
உலகுக்குள் கொண்டு வந்தாள்..
ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..
என்னைச் செதுக்கித்
தமிழனாய் செய்தாள்!..


தங்கை

எனக்காக அழுவாள்..
என்னையும் அழவைப்பாள்..
என் எச்சம் அருந்தியவள்..
ஆருயிர் நண்பியாயும்
அழகிய உறவாயும்
வந்த...என்
தாய்வீட்டுக் கடமை.


நண்பி

அவசரமாய் வரும்
ஆறுதல் வார்த்தைக்கு
சொந்தக்காரி..என் வெற்றிக்கு
குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..
கல்யாணமான பின்தான் காணாமல்
போய்விட்டாள்!!


காதலி

வற்றாத தமிழ்
வார்த்தைககடலில்
குதித்தாள்;..கரைந்து போகாத
என் காதலை
கவிதையாய் கண்டெடுத்தாள்..
தான் மட்டும் படித்து
பெரும் சுயநலவாதியானாள்!!


மச்சாள்

அனுமதி இல்லாமல்
என்அறைக்குள் நுழையும்
அழகிய திமிர்..சின்ன
சூறாவளி..அப்பப்போது
என் சட்டையையும்
அணிந்துகொள்ளும்!.


மனைவி

எழுத இதழ் தந்தாள்..
கோர்க்க விரல் தந்தாள்..
மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்
இளைப்பாற இடம் தந்தாள்..
இவள் என்னைக் குழந்தையாயும் தந்து
தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்
பின் தரமாய் நிற்கிறாள்!!


அத்தை

உபசரிப்பில் கூட
உபத்திரபவம் தரக்கூடாதென்று
நினைத்து..மெதுவாக
பேசும் இன்னொரு அம்மா!..


சித்தி

தொலைதூரத்தில்
வாழ்ந்து..சுகம்
விசாரித்துக்கொண்டிருந்தாலு
நல்லது கெட்டதிற்கு
ஓடோடி வருவாள்
பக்கத்துவீட்டுக்காரி போல்!!


பாட்டி

திட்டித்திட்டி தீர்த்தாலும்
தேவைக்கு பாக்குப் பெட்டி
திறந்து பணம் தரும்..
வயதான தனலட்சுமி..


மகள்

பிறந்ததும்
பிஞ்சுப்பாதங்களால்
முகத்தில் மிதித்தாள்
இதத்தில் செத்தேன்..
வளர்கையில்
பிஞ்சு விரல்களால்
கன்னம் கிழித்தாள்
சுகத்தில் செத்தேன்..
பருவத்தில் காதல் மோகத்தில்
இதயத்தில் மிதித்தாள்..
நிஜமாய் செத்தேன்!!


மருமகள்

காலைக்கட்டிக்கொள்ளவும்
தோளில்தொற்றிக்கொள்ளவும்
அக்காபெற்ற அழகிய பொம்மை!!


பேத்தி

என்மூக்குக்
கண்ணாடியில் மோகம்
கொண்டவள்..கிழ
முதுகேறி சவாரி
செய்யும் சந்ததி
முத்திரை!...

நன்றி : முகம் தெரியா நண்பனுக்கு....

புதன், 14 ஜூலை, 2010

யுத்தத்தின் குரல்


பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானது.
நீல வானம் கறுப்பானது.
எம் பச்சை வயலும் தரையும் சிவப்பானது.
எம் கண்ணீர்பட்டு தண்ணீர் கூட இரத்தமானது.
ஐயோ ஐயோ இது கனவல்ல.

போகும் வழியெல்லாம் இரத்த வாடையுடன் பிரேதங்கள்
இல்லை இல்லை இவர்கள் பிரேதங்களே இல்லை
என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என் அண்ணா, என் நண்பர்கள்.
மனிதர்களை மனிதர்களே அழித்துவிட்டார்கள் . . .

அருகில் இருந்து கட்டியணைக்க ஆசை
கண்ணீர் வற்றும் வரை கதறியழ ஆசை
என்னைச்சுற்றி பல துப்பாக்கி முனைகள்:
பயங்கர ஆண்களால், என் சகோதரியின் உடல்
பலாத்காரப்படுத்தப்பட்டு, பயத்துடன் விறைத்துக் கிடக்கிறது
இரத்தக் கறைகளுடன், கால் இழந்து கையிழந்து தரையில் துவண்டு
அலறும் என் சகோதரர்களின் குரல் அதிகரிக்கின்றது
இறந்த பெற்றாரை எழுப்ப தரையில் கதறும் எம் குழந்தைகளை,
மிதித்து செல்கின்றன, வழி தெரியாப் பாதங்கள் . . .
பயங்கர செல் துண்டுகளிடம் இருந்து – இரு உயிர்களை காப்பாற்ற,
ஓடிய கர்ப்பிணி தாயின் இரண்டு கால்களும், சிதைக்கப்பட்டு தரையில் துடிக்கின்றன
செல் துண்டுகள் என்னையும் சிதைக்க ஓடி வருகின்றன.
நானும் பிணமாகமாட்டேன்.
அந்த பயங்கரமான ஆண்களால் பலாத்காரப் படுத்தப்பட மாட்டேன்
என்னை சுற்றி ஆறாக ஓடும் என் பிள்ளைகளின் இரத்த கண்ணீரையும்,
சிதைந்து கிடக்கும் என் சகோதரனின் உடலையும் தொடர்ந்தும் பார்க்கமாட்டேன்
(எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.)

ஓடினேன் ஓடினேன் முடியவில்லை
உறங்க வீடும் இல்லை.
உயிர் வாழ உணவும் இல்லை.
இரத்த வாடை கொண்ட சிவப்பு ஆடையை மாற்ற துணியும் இல்லை.
காயங்களுக்கு மருந்தும் இல்லை
கட்டியணைக்க கரங்கள் இல்லை
அன்பான வார்த்தைகள் கூற யாரும் இல்லை
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.

பயங்கர கொடுமைக்காரர்கள் எமது கர்ப்பப்பையை சிதைத்தார்கள்
தோழர்களின் கோபங்களால்
எம் காயங்களின் மேல் துப்பாக்கியை நடக்க செய்தார்கள்.
சமாதானம், மனித உரிமை பேசும் எம் நண்பர்கள் கூட
மக்கள் குரல் கேட்காது போனார்கள்.
அயல் நாட்டு நண்பர்கள், இறந்து கிடக்கும்
எம் குழந்தைகளின் உடல் மேல் போர் ஒப்பந்தம் பேசிக் கொண்டார்கள்
பலம் வாய்ந்த தலைவர்கள் தம் பதவி வெறிக்கு
வறுமையில் வாழும் முகம் தெரியா
எம் காக்கி சட்டை சகோதரனை இரையாக்கி கொண்டார்கள்.
உலகநாட்டு பிரதிநிதிகள், பலம் வாய்ந்த ஆண்களை காப்பாற்றுவதிலும்,
பயங்கரவாத சட்டத்தை நிலை நாட்டுவதிலும் அக்கறை கொண்டார்கள்.

எம் நிலைகண்டு: அனைத்தும் கற்பனை என்றார்கள் – என் நண்பர்கள்
சுதந்திரத்தின் இறுதிக் கட்டம் என்றார்கள் – எம் நாட்டின் காவலர்கள்
எம் இரத்தம், எந்தப் பகுதியை சார்ந்தது என்ற பரிசோதனைக்கு தயாரானார்கள் – என் தோழர்கள்
பயங்கரவாதம் என்றார்கள்; – பிற நாட்டு நண்பர்கள்.
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின

பல வழிகளில் என் குரலை உயர்த்தி கூறினேன்:
இல்லை: இவை கனவுகளும் கற்பனைகளும் அல்ல
இல்லை: சுதந்திரமும் அல்ல:
இல்லை: பரிசோதனையும் அல்ல
இல்லை: பயங்கரவாதமும் அல்ல
இவை:
எம் இரத்தக் கண்ணீர்.
இரத்த ஆறுகள்
இரணத்துடன் கிழிந்துகிடக்கும் காயங்கள்.
வலியுடன் இணைந்த குமுறல்கள்
அமைதியை தேடும் விலையற்ற உயிர்கள்.

30 ஆண்டுகளாக – எம் உடல்
துப்பாக்கிகளாலும், செல் துண்டுகளாலும் துளைக்கப் பட்டு
சிதைக்கப்பட்டு வீதியில் கிடப்பது – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?
நின்மதி தேடி, சமாதானம் தேடி,
ஓடும் எம் பாதங்கள் – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?;
எம் குழந்தைகளின் பிரேதங்களை – உன் கண்கள் எப்படிக் காண மறுத்தது?
எம் கர்ப்பப்பையை- உன்னால் ஏப்படி சிதைக்க முடிந்தது?
துப்பாக்கியும் செல்த்துண்டுகளும் பயங்கரமான பாதங்களும்
எம் முகத்தை அழித்துவிட்டது.
எம் குரலை புதைத்து விட்டது

எமது குழந்தைகளின் பிணங்களின் மேல் – நடத்தும் போர்ப் பேச்சு வார்த்தையை நிறுத்து
பயங்கர துப்பாக்கி முனைகளுக்கும், கொடூர கொலைகளுக்கும் துணைபோவதை நிறுத்து
எம்மை, எம் குழந்தைகளின் எதிர்காலத்தை,
அழிக்கும் உன் அநியாய செயல்களை நிறுத்து
வன்முறையை நிறுத்து
இரத்தம் காண்பதை நிறுத்து
பசிக் கொடுமையை நிறுத்து
எம் காயங்களை பார்க்க மறுப்பதை நிறுத்து
யுத்தத்தை நிறுத்து
பயங்கரமான உன் பாதங்களாலும் துப்பாக்கிகளாலும்
எம் குரல் புதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போதிலும்

உங்கள் பாதங்கள் எம் காயத்தின் கசிவை உணரும்வரை
உங்கள் செவிகளில் எம் குரல் கேட்கும் வரை
உரத்து கத்துவோம் “யுத்தம் வேண்டாம்”

-றெஜினி டேவிட்-

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதியதோர் உலகம் செய்வோம்.


உழைக்கும் கரங்களே உங்களின் கரங்களை நம்பியே இந்த உலகம்
[உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு... மே 01]


புதியதோர் உலகம் செய்வோம் - அதனைப்
புரிந்துணர்வுடன் பகிர்ந்து கொள்வோம்
புத்துணர்ச்சியுடன் வாழ்ந்தே இவ்வுலகைப்
புனித பூமி ஆக்கிடுவோம்

சாதி சமயங்களும் வேண்டாம் - தினமும்
சண்டை சச்சரவும் வேண்டாம்
சாதியை ஒன்றாய் ஆக்கி - நல்ல
சாதனையொன்று நாம் சமைப்போம்.

முதலாளி தொழிலாளி என்ற
முதலை தனையே ஒழித்திடுவோம்.
மமதை அற்று மானிடராய் வாழ
மாற்று வழியை நாமென்றும் நாடிடுவோம்.

இன மத மொழி வேறுபாட்டை
இன்றே நாம் களைவோம்.
ஏழை எளிய மக்களிடம்
இறக்கம் நாம் காட்டிடுவோம்.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை நாம் கொளுத்திடுவோம்.
மானமுள்ள மனிதராய் வாழ
என்றும் நாமே முயன்றிடுவோம்.

பாட்டாளி வர்க்கம் உயர்ந்திடவே
பாட்டுக்கள் நாமும் புனைந்திடுவோம்.
உழைக்கும் மக்கள் உயர்ந்திடவே
ஊன்றுகோலாய் நாம் இருந்திடுவோம்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

எம் மண்ணின் அழகிய நினைவுகள்...

சனி, 17 ஏப்ரல், 2010

கன்னிமார் கௌரி அம்பாள் வருடாந்த மகோற்சவம்.


[அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கௌரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நிகழும் விக்ருதி வருடம் சித்திரை மாதம் 6ம் நாள் 19/04/2010ம் திகதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துநாட்கள் சிறப்பாக உற்சவம் நடைபெறும்.

வீரமனைப் பதி வாழும் வீரத் தாயே கௌரியம்மா....!
வீரமனைப் பதி வாழுகின்ற
வீரத் தாயே - எம்
வேண்டுதலுக்குத் தலை சாய்க்க
வேண்டுமம்மா.
காலை மாலை உன் பாதம்
பணிகின்றேன்.
வேளை நல்ல வேளையாக
வேண்டுகின்றேன்.

ஆகாதது ஏதுமுண்டோ
வாழ்விலே
அவல வினை அகன்றிடும்
நொடியினிலே
ஓடித் துயரகலும் உன் வாசற்படி
கடந்தால்
உயர்வு பலவும்
அடைவோம் நாம்

பக்தியுடன் என்றும் போற்றிடவே
பலமும் நலமும்
எமக்கு அருள்பவளே!
குப்பிளான் பதியின் குன்றென
மிளிர்ந்து குறை யாவும்
போக்கிஎமைக் காப்பவளே!

உள்ளத்திலே தினம் உன்னைப்
பரவி வழிபடவே
ஊனங்கள் யாவும்
எமை விட்டு விலகிடுமே
கன்னிமார்த் தாயின்
பாதங்களைத் தினம்
தொழுதேற்றவே
கன்ம வினை யாவும்
தொலைந்திடுமே!

சித்திரை தோறும் உன்
மகோற்சவம் காண
திரண்டு வரும்
அடியார் கூட்டம்
சீர் பெருக்கவே - உன்
திரு வீதி வலம் வந்து
திருப்பேறுடன் அருட்பேறும்
பெற்றிடுவர்.

நம்பினோர் கெடுவதில்லை
நம்பியே நாமுன்னைச்
சரணடைந்தோம்
சூலம் பிடித்து வந்து
துயர் யாவும் போக்கி
எமைக் காத்திடம்மா
வேப்பிலை ஏந்தி வந்து - எம்
வெவ்வினையை நீ
களைந்திடம்மா!

புதன், 14 ஏப்ரல், 2010

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு தீர்வொன்று எமக்குத் தந்துவிடு...


[உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்]

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
தீர்வொன்று எமக்குத் தந்துவிடு
இத்தரை மீதினில் நாம் படும்
இன்னல்களைப் போக்கிவிட வந்துவிடு
நித்தம் உழைக்கும் மாந்தர்களின்
நெஞ்சம் களிப்பில் மூழ்க வந்துவிடு.

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சிறப்பினை எமக்குத் தந்துவிடு
அல்லல்கள் தீரவே வந்துவிடு
அகதி வாழ்வு ஒழியவே வந்துவிடு
சித்திரைத் தாயே வந்துவிடு
சித்திரை மகளே வந்துவிடு.

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சீர்வாழ்வு எமக்குத் தந்துவிடு
சிங்காரச் சித்திரையே வந்துவிடு
சித்திரை ஒளியே வந்துவிடு
விக்ருதி வருடமே வந்துவிடு
சமாதானம் மலரவே வந்துவிடு

சித்திரைப் புத்தாண்டே வந்துவிடு
சிறப்பான வாழ்வு எமக்குத் தந்துவிடு
சீரழிந்துள்ள எம் மக்கள் வாழ்வை
சீர்ப்படுத்தி அளிப்பதற்கு வந்துவிடு
சித்திரை புத்தாண்டே வந்துவிடு
தீர்வொன்று எமக்குத் தந்துவிடு.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இதே இரவில்....


நீண்ட மழை ஓய்வின் பின்னால்

இலைகளிலி்ருந்து சொட்டுகிற

துளியின் ஓசைகளை

என்னைப் போலவே சிலர்

இந்த ஜாமத்திலும்

கேட்டுக் கொண்டிருக்கக்கூடும்...

இதே இரவில்...


குடும்பமே படுத்துறங்குகிற

அகதிக் கூடாரத்துள்

அருகிலேயே கிடக்கின்ற

அம்மாவும் பிள்ளைகளும்

உறங்கியிருக்கலா மென்கிற

ஐயப்பாட்டுடன்

தன் இளம் மனைவியின் முடியை

கோதிக் கொண்டிருக்கிற கணவன்

தாயின் செருமலைக் கேட்டு

கையை இழுத்துக்கொள்வான்

இதே இரவில்...

தூங்கும் போது எப்போதுமே

கணவன் மீது கால் கை போடுகிற

பழக்கமுள்ள மனைவி

அவ்ன் காணாமல் போய்

காலாண்டாகியும், அதே பழக்கத்தில்

காலையும் கையையும் தலையணைமேல்

வீசிக்கொண்டிருப்பாள்..!

அதே வீட்டில்

கதவு தட்டப்படுவது போல்

சத்தம் கேட்டு

கனவில் திடுக்கிட்டெழுந்த அவனது தாய்

ஒரு வேளை மகனாக இருக்கலாம்..?

என்கிற அப்பாவித்தனமான

நம்பிக்கையில்

ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்ப்பாள்

இதே இரவில்...


வெளவால் போல் தலைகீழாக

வதை முகாம்களில் தூக்கப்பட்டிருக்கும்

எம்முடைய பிள்ளைகள்

தாங்கொணா வதைகளில் தளர்ந்துபோய்

உலர்ந்து் போகிற ஓலங்களை

எழுப்பிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

இப்போதைய குடாநாட்டின்

இளைஞர்கள்

எதுவுமே நடந்துவிடவில்லை

என்பதுவாய்

மது விருந்தில் திளைத்தபடி

ஊர்ப் பெண்ணொருத்தியை

நடிகையுடன் ஒப்பிட்டு

பேசிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

அடர்ந்த காட்டிற்குள்

விழுப்புண்களோடும் வேதனைகளோடும்

தோழர்கள்

வேகமாக நழுவிக்கொண்டிப்பார்கள்

இதே இரவில்...

கடவுளாலேயே கை விடப்பட்டவனான

நான்

இத்தனை வருடகால

வி்லை கொடுப்பும்

ஒரு கனவினைப்போல்

இரவோடிரவாக

முடிந்து விட்டதென்பதனை

நம்ப முடியாமலும் தாங்க முடியாமலும்

அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும்

ஏதோ ஓர் வைராக்கியத்தில்

வேதனையைத் தீர்க்க

வெற்றுத்தாளில்

வரைந்து கொண்டிருக்கிறேன்

“சிதைகள் ஊன்றப் படுவதற்கான

காரணத்தையும்

விதைகள் முளைக்கப் போவதற்கான

காலத்தையும்”...


தி.திருக்குமரன்

வியாழன், 8 ஏப்ரல், 2010

நிரந்தர சமாதானம் வேண்டும்!


ஏசியில் வாழ்கின்ற
வாழ்க்கையது வேண்டாம்.
ஓசியில் கிடைக்கின்ற
நிவாரணமும் வேண்டாம்.

இடைஞ்சல்கள் ஏற்படுத்துகின்ற
இனவெறியும் வேண்டாம்.
மனங்களை மழுங்கடிக்கின்ற
மதவெறியும் வேண்டாம்.

மனிதனை விலங்காக அலைய விடும்
பணமும் வேண்டாம்.
பாடாய்ப் படுத்தும்
பதவிகளும் வேண்டாம்.

உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும்
போலி உறவுகளும் வேண்டாம்.
உறவுகளைப் பிரிக்கும் இந்தக்
காதலும் வேண்டாம்.

அல்லல் பட்டு வாழும்
அகதி வாழ்க்கையும் வேண்டாம்.
அழிவினை ஏற்படுத்துகின்ற
யுத்தமும் வேண்டாம்.

எம் தாய் நாட்டில்
நிம்மதியாய் நாம் வாழ
நிரந்தர சமாதானம் மட்டும்
வேண்டும்.... வேண்டும்....

வியாழன், 25 மார்ச், 2010

விலக்கி விடு போதையை...


மது தரும் மயக்கமெல்லாம்
விதி செய்யும் வேலையென்று
சதி செய்யும் உன் வாழ்க்கை
சாவிற்கே கொண்டு செல்லும்
கதியென்று மதுவை நினைத்திராதே
காவும் நோய்க்கு ஆளாகாதே
கனவுக்கான உன் போதை
கலக்கத்தை உண்டு பண்ணும்
போதை தன்னில் நீ மீண்டால்
பூமி தன்னில் நீ உயர்வாய்!

பல காலமாய் நீ சேர்த்த
பல நூறு நன்மைகள் தானும்
சில நாழிகைக்குள்
சிதைவுறாமலிருக்க
சிந்தித்து நீ பார்த்தால்
சிதையாது உன் வாழ்க்கை!
அலைமோதும் மனம் தன்னில்
விலையாக ஏன் போதை....?
எதிர்பார்ப்புக்கள் நிறைந்த
உன் வாழ்வு
எரிந்து போக விடலாமோ?

விரும்பாதே போதையை
வெறுப்பாகிப் போகும்
உன் வாழ்வு
கரும்பாக உன் மனத்தைக்
கட்டி நீ வைத்திருந்தால்
காலமெல்லாம்
இவ் உலகம் உன் காலடியில்!

சூரியனாய் நீயிருந்தால்
சுற்றி வரும் பல கோள்கள்
சுழன்று போகாமல் உன் மனதை
விலங்கிட்டுக் காத்திருப்பாய்
விலகும் உன் துயரெல்லாம்
துலங்கும் உன் பெயர் கூட...!

அல்லல்ப்படும் வாழ்க்கைக்குப்
போதை அது வழியல்ல!
புரிந்து கொள் உன் வாழ்வை
தெரிந்து விடும் உன் பாதை!
விரும்பி அதை வெறுத்துவிடு
விளையும் வெளிச்சம்
உன் வாழ்வில்!

வெள்ளி, 19 மார்ச், 2010

விழிப்பு


இருட்டுக்குள்ளே
இமைத்துக் கொண்டிருந்த
என் கண்களுக்கு
விழிப்பு வந்தது - மெதுவாக
விழித்துப் பார்க்கிறேன்.
மனிதன் நவ நாகரீகத்தில்
மோகம் கொண்டு - அதன்
போர்வைக்குள் அகப்பட்டு
உணர்வூட்டுவாரின்றித்
தினம் தினம் சீரழிகின்றான்!

சந்தியிலே நிற்கின்ற
இளைஞர்களினால்
வேலைச்சுமை தாங்க முடியாது
வெந்து கொள்ளும் அம்மாமார்...
தினமும் நெற்றி வியர்வை
சிந்தச் சிந்த
குடும்பத்துக்காய் உழைத்து
ஓடாய் இளைத்து
வீட்டுச் செலவுக்கே
காசில்லாது சினம் கொள்ளும்
அப்பாமார்...

பக்கத்து வீட்டுக் குடிகார
அப்பனின் குடியால்
அவன் குடும்பம் அன்றாடம்
அவதியுற்று நடுத்தெருவில்
நிற்கும் நிலை
அச்சச்சோ! அவன் வாயால்
சகிக்க முடியாத
உச்சரிப்புக்கள்.

சீதனக் கொடுமையால்
ஆசைகளை வீட்டிலே
பூட்டி வைத்து
அழகு பார்க்கும் பெற்றவர்கள்.
பெற்றெம்மையெல்லாம்
பேணி வளர்த்தாளாக்கிய
அம்மா, அப்பா
யாருமற்ற அனாதைகளாய்த்
தஞ்சம் புகும் முதியோர் இல்லம்.

ஐயோ இதென்ன கொடுமை!
என்னால் இவற்றைப்
பார்க்கவே முடியவில்லை
மீண்டும் கண்களை நான்
இறுக மூடிக் கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

பெண் விடுதலைக்காய்........


மார்ச் 08 பெண்கள் தினத்தை முன்னிட்டு.........

கல்விக் கண் திறக்கச் செய்வோம்
கசடுகளை ஓயச் செய்வோம்
முகில்களைக் கிழிக்கச் செய்வோம்
முறம் கொண்டு எழுந்து நிற்போம்

விண்வெளியில் களமமைப்போம்
மண்ணுலகைப் பொன்னுலகாக்குவோம்
பூவையரின் விழி நீரைப்
புயலாக மாறச் செய்வோம்

பொங்கியெழுந்தே புதியதோர்
சரித்திரம் படைப்போம்
கொழுந்து பறிக்கும் கைகளைக்
ஏட்டைப் பிடிக்கச் செய்வோம்

பானை பிடிக்கும் கைகளால்
பாரை வாழ வைப்போம்
நெஞ்சத் துணிவு கொண்டு
நீதிக்காய்த் தினம் உழைப்போம்

தொட்டிலாட்டும் கைகளால்
நாட்டைக் கட்டியாளச் செய்வோம்
வெட்டிப் பிளந்தாலும்- பெண்
விடுதலைக்காய் போராடுவோம்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

பெண் கவிகள்


நான் படித்த கவிதைகளிலேயே என் நெஞ்சை உலுக்கிய வரிகள் இவை. இதை வாசகர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

“.....அடுத்த ஆண்டும் வசந்தம்
ஆர்ப்பாட்டமாய் வரும்
அடுத்த ஆண்டும்
கொல்லையில்
தேன் சிட்டு முட்டையிடும்
முட்டையை நேசப்பார்வையில்
அடைகாக்க நானிருக்க மாட்டேன்.
அருவருத்தாலும்
நினைவில்
அசையாமல் நின்று போன அட்டையைக் கண்டலற
நானிருக்க மாட்டேன்.
வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும்
மழை நாள் இரவில்
பேசித்தீர்க்க நானிருக்க மாட்டேன்...
அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்....”
- வெண்ணிலா -

“....கண்ணகியைப் பேச
கண்ணகியே எழுந்திருந்தால்
மதுரைக்குப் போய்
மன்னன் முன் சிலம்பை உடைத்து
தெய்வமாகி இருக்கமாட்டாள்.
புகாரியிலேயே கோவலனின்
மண்டையை உடைத்து
மனுஷியாகி இருப்பாள்.
சீதையைப் பேச
சீதையே எழுந்திருந்தால்
அக்னிப் பரீட்சைக்கு
இராமனையும் இழுத்திருப்பாள்.
ஆம் பெண்ணே
உன்னைப் பேச நீயே எழு.....
- அறிவுமதி -

“....எனக்கு
முகம் இல்லை.... இதயம் இல்லை....
ஆத்மாவும் இல்லை....
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்.... நீண்ட கூந்தல்
சிறிய இடை..... பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல், படுக்கையை விரித்தல்,
குழந்தையைப் பெறுதல், பணிந்து நடத்தல்.
இவையே எனது கடமைகள் ஆகும்.....”
-சங்கரி -

“.... ஆறு மணிக்குள்
அவசரமாய் முடிக்க வேண்டும்.
பெண் விடுதலை பற்றிய என் பேச்சை
ஐந்து நிமிடம் தாமதமாய்ப் போனாலும்
அறை விழும் அவரிடம்.......”
- திலகவதி -

“.....பாவம் இந்த மனைவி
இல்லறக் கிரிக்கட்டில்
சமையலறைக்கும்
படுக்கையறைக்கும்
ரன்கள் எடுத்தே ரணமாய்ப் போனாள்.....”
- வைரமுத்து -

“.....கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும் நீங்கள்
கேட்ட வருணனை கொஞ்சங்களோ
இறக்கை வெட்டிய கிளிகளாய் - நீங்கள்
எத்தனை காலம் இக் கூண்டுக்குள்ளே......”
- இன்குலாப் -

“.....ஆரம்பமாயிற்று
என் மீதான விசாரணை
நடக்க வைத்துப் பார்த்ததில்
புன்னகை பூத்தனர் என்னைப் பிடித்திருப்பதாய்
நீண்டிருந்த பட்டங்களைக் கேட்டபடி
சிற்றுண்டித் தட்டுக்களும் தேநீர்க் கோப்பைகளும் காலியாயின
பற்றியிருக்கும் என் அரசுப் பணியை அறிந்ததும்
கைகளில் திணித்தனர் தாம்பூலத்தை
சம்பள விவரத்தைப் பட்டியலிட
குறித்தே விட்டனர் கல்யாணத் தேதியை
எதற்கும் இருக்கட்டுமென
கவிதை எழுதுவதை கடைசியில் சொல்லி வைத்தேன்.
வந்தவர்கள் எழுந்தனர்
வாயிலை நோக்கி...."
- சுகிர்தராணி -

திங்கள், 1 மார்ச், 2010

பாசந்தனை பற்றறுக்கும் மாசி மகத் திருநாள்!


மாசித்திங்கள் மக நட்சத்திரத்திருநாள்
மக்கள் பாசப் பற்றறுக்கும்
மகேசன் பெருநாள்!
வருணனின் பிரம்மஹத்தி தோஷப் பீடிகையை
விட்டொழிக்கவென்று
தேவர் வேண்டி நின்ற போது
கருணையே வடிவான
கருணாமூர்த்தி நின்
கடைக்கண் பார்வை
பெற்றருள் பெற்ற நன்னாள்!

கணக்கில்லா ஆசைதனை
விதைத்து நின்று
திசையில்லா வாழ்வதனைத்
திருப்தியென்று
பாசத்த்ழைகளுள் தினமும்
சிக்கித் தவித்தே
பாரிய வாழ்வதன் பொருளறியாது
மாளுவர் ஆயிரம்
மானிடர் தினம்.

பெரியவர் இவர்
சிறியவர் அவர் என்றே
அகந்தனில் மமதை கொண்ட
மானிடரின் சிந்தை
தெளியவென்று சிறப்புற்ற ஒருநாள்
மாதொரு பாகனின் மலர் பாதம் பற்றி
மாசிமகத் திருநாளில் அவனருள் பெற்றிட
பாசமாம் “பற்றறுத்துப் பாரிக்குமாரியவன்”
மோட்சம் பெற்றுயர
சாந்தியும் சமாதானமும்
தழைத்தோங்க
வேண்டி வழிபடுவோம்.

சனி, 13 பிப்ரவரி, 2010

காதலின் உயர்வு


பார்த்தவுடன் வருவது தான் காதல்
பழகியபோது ஒருவரையொருவர்
புரிந்துகொள்வது தான் காதல்
பள்ளிக் காலங்களிலே
இடையிடையே வந்து போகும்
பசுமையான நினைவுகளே
இந்தக் காதல்.

துள்ளித் திரியும் வேளை தன்னில்
சுமைகளையும் சுகங்களையும்
சொல்லித்தரும் சுதந்திர கீதமே காதல்.
பணத்தால் வருவதல்ல
உண்மைக்காதல்
பண்பு, பாசம், நேசம்
சுரக்கும் இன்ப
ஊற்றே காதல்.

கரும்பு போல இனிப்பதே காதல்
கனவுகள் காணும்
விந்தை உலகமே காதல்.
உள்ளமிரண்டும் இணைவதே காதல்
உயிருக்குள் உயிராகும்
உன்னதக் காவியமே
இந்தக் காதல்.

கண்களின் சந்திப்பினால்
கட்டுண்டுறச் செய்த காதல்
கற்பனைகள் ஆயிரம் காண
களமமைத்துத் தந்த
கருவூலமே காதல்!
பருவ இராகங்கள்
பல பாடிடும் காதல்
பாலைவனத்தையும்
பசுமையாக மாற்றும்
அற்புதச் சக்தியே காதல்.

காமம் கொண்டு பழகுவதல்ல காதல்
கனிவாக ஈருயிரும் கலந்துலாவும்
தேசியகீதமே காதல்.
இரு உள்ளங்களின்
மொழியே காதல்.
வாலிபத்தின்
வைர நினைவுகளே காதல்.
வற்றாத இன்ப ஊற்றே காதல்.

ஏமாற்றுவதற்கல்ல காதல்
ஏணியாய்த் தினம்
துணையிருப்பதே காதல்
சொன்னால் இனிமை காதல்
சுகமாய்ச் சிரிப்பதே காதல்
கரும்பு போல இனிப்பது
தான் காதல்
கவி புனைய எமக்குக்
கற்றுத்தந்த ஆசானே காதல்
இளமைக் காலத்தின்
அழியாப் பக்கமான காதலே
என்றும் வருவாய்
எம் துணையாக.....

வியாழன், 11 பிப்ரவரி, 2010

சிவனுக்குகந்த சிவராத்திரி விரதம்.


மாசித்திங்கள் தன்னில்
மாசறு மாதொரு பாகனை
மனதிலெண்ணி
கார் இருள் முழுதும்
கண் விழித்தவன்
கருணை பெறும்
காலமிதுவன்றோ!

படைப்பவன் பிரம்மாவும்
காப்பவன் விஷ்ணுவும்
கணத்தில் தமக்குள்
கணக்கில்லாப் பெருமையுடன்
சோதியவன் பாதமும்
சிரமும் தேடிய இன்னாள்
மானிடரின் மனக்கிலோசமொழித்து
மகிழ்வூட்டும் விரதப்பெருநாள்.

மானிடராய்ப் பிறந்தவுன்
பற்றினைப் பற்றறச்செய்து
மகாதேவன் அவன் புகழ் கூறிப்
போற்றிப் பணிந்து
மனம் வாக்கு காயமதில்
நிலை நிறுத்தி
மாசிலாப் பேறெய்தும்
மகத்தான திருநாள்!

மாந்தரெல்லாம் உடல் துலக்கி
மலர் அள்ளி
நடராஜன் பெயர் சொல்லி
ஊனுருக்கி உள்ளொளி பெருக்கி
வாழ்வதன் பேறெய்தும் ஒருநாள்
மகேசனவன் புகழ் பாடி
மகிழும் இராத்திரி
மகாசிவன் பெருமை கூறும்
மகாசிவராத்திரியாமே!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....! தொடர்கிறது....


உலகத் தமிழனும் முழுஅளவில் தமிங்கிலத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறான்.

‘மம்மி’, ‘டாடி’, ‘அங்கிள்’, ஆண்டி’, என்று அவன் குழந்தைகள் பெற்றோரை உறவினர்களை அழைப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அவனுக்கு..

எப்போதாவது இலண்டனுக்குத் தன்னைப் பார்க்கத் தமிழீழத்தில் இருந்து உறவினர்கள் வரும் போது அவர்களிடம் ‘என் பிள்ளைக்கு தமிழ் கொஞ்சம் கூட பேச வராது’ என்று சொல்லிக் கொள்வதில் எல்லையில்லாப் பெருமை.

தன் பிள்ளைகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத வைத்துத் தன்னையே மறக்கிறான் தமிழன்.

தமிழன் வீழ்ச்சிக்கும் தமிழின் வீழ்ச்சிக்கும் தமிழனே வாசல் திறக்கிறான்.

இலங்கைத் தீவு முழுவதிலுமே 1956 ஆம் ஆண்டுதான் தனிச் சிங்களத்தை இன வெறிச்சிங்களவர்கள் ஆட்சிமொழியாக்கினார்கள்.

அதே 1956 இல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த பேராயக்கட்சி தமிழை ஆட்சி மொழியாக்கியது.

சிங்களவனைப் பொறுத்தவரை அவன் தனது தாய் மொழியை ஆட்சி மொழியாக்கிச் சிங்களத்தை உயர்த்தி விட்டான்.

எங்கும் எதிலும் சிங்களம் என்றாகி விட்டது.

ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றிச் சிங்களவனுக்கு 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. தமிழ் நாட்டானுக்கும் 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. சிங்களவன் மொழிப்பற்றையும் நம் மொழிப்பற்றையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழ் நாட்டில் செத்துக் கிடக்கிறது.

கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் ஒரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய ஆங்கிலம் ஆட்சிமொழி.
கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் இன்னொரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய சிங்களம் ஆட்சி மொழி.

தலை குனிய வேண்டும் தமிழன்.

பிரான்ஸ் நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது. ஜேர்மனிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ஜேர்மனி தெரிகிறது. ரஷ்ய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ரஷ்யா தெரிகிறது. தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது மட்டும் இங்கிலாந்து அல்லவா தெரிகிறது.

உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும் தமிழன்.

இனியும் தமிழின் அருமை மறந்து வாழ்தல் தமிழர்க்கு இழிவு பயப்பதாகும்.

நயாகரா நீர்வீழ்ச்சியில் ‘நல்வரவு’ எனத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதாம். கேட்போரிடம் ‘உலகின் மூத்த மொழியான தமிழை உலகின் உயர்ந்த நீர்வீழ்ச்சியான நயாகராவில் எழுதி வைத்திருக்கிறோம்’ என்கிறார்களாம்.

யப்பானியப் பல்கலைக்கழக வாயில் முகப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்னும் சங்கத் தமிழ்ப் பாடல் வரியை மொழிபெயர்த்து யப்பானியர் எழுதி வைத்துள்ளனராம்.

ஜெருசேலம் நகரில் உள்ள ஒலிவ மலையில் கிறிஸ்த்தவக் கோயில் ஒன்றில் ஜேசு கற்பித்த வழிபாட்டுக் கருத்து உலகிலுள்ள அறுபத்தெட்டு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறதாம். அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளதாம்.

புத்தர் தமிழ் படித்தார். என்று மிகப்பழைய வடமொழி நூலான ‘இலலித விசுதாரம்’ தமிழைப் புகழ்ந்து பேசுகிறதாம்.

என் கல்லறையில் ‘ ஒரு தமிழ் படித்த மணவன்’ என எழுதி வையுங்கள். என்று மேனாட்டாரான தமிழறிஞர் போப் தனது மறைவுக்கு முன்பு நண்பர்களிடம் எடுத்துரைத்தாராம்.

‘திருக்குறளைப் படிக்க நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்’. என்க் காந்தியடிகள் திரும்பத் திரும்பக் கூறுவாராம்.

மற்றவர்களுக்கெல்லாம் தமிழின் அருமை பெருமை தெரிகிறது. உற்றவர்களுக்கு மறந்து போயிற்றே.

இன்னொன்று -

அடுத்தவர்களெல்லாம் தமிழைப் போற்றியிருக்கிறார்கள். என்பது ஒரு புறம் உண்மை தான் எனினும் அவர்களில் யாராவது தங்களைத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?

குமரிக் கண்டத்திலிருந்து உலகம் முழுவதும் பரவிய காலம் முதல் இற்றை வரை தமிழன் தான் போன போன இடங்களிலெல்லாம் ஆங்காங்குள்ள இனத்தவனாய் மாறிப் போனானே தவிர அடுத்தவன் தமிழனாய் மாறினான் என்ற குறிப்பு வரலாற்றில் எங்குமே இல்லை.

தமிழனால் தமிழ் அழிந்தது. என்பது நமது நேற்றாக இருந்தது.

தமிழனால் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. என்பது நமது இன்றாக இருக்கிறது.

தமிழனால் தமிழ் மீட்கப்பட்டது. என்பது நமது நாளையாக இருக்கட்டும்.

- முற்றும்-

(காசி ஆனந்தனின் “ தமிழனா... திமிங்கிலனா? ” என்ற நூலில் இருந்து.....)

வெள்ளி, 22 ஜனவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....!


தமிழன் தன் தாய்மொழியைப் புகழ்ந்தான் - போற்றினான் - தலையில் வைத்துக் குதித்தான் - காப்பாற்றவில்லை.
சொந்த மொழி அழியப் போகிறதே என்னும் கவலை கொஞ்சமும் இன்றி வந்த
மொழிக்கெல்லாம் தமிழன் வாசல் திறந்தான்.

தமிழ் மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பது தெரிந்தும் தமிழன் பிற
மொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான்.

“வீட்டுக் கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும்
கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும்
கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ
ரிக்சாவில் தப்பி ஓடிய போது தகவல் அறிந்த பொலிஸ் ஏட்டு விரட்டி
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின”.

செய்தி ஏட்டில் ஒரு திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான்
என நினைக்கிறோம்.

ஆனால்........

தமிழா இது?

‘சாவி’ - போர்த்துக்கீசிய மொழி, ‘பீரோ’ - பிரெஞ்சு மொழி,
‘துட்டு’ - டச்சு மொழி, ‘கோணி’ - இந்தி மொழி, ‘பப்பாளி’ - மலாய் மொழி,
‘சப்போட்டா’ - யப்பானிய மொழி, ‘கொய்யா’ - பிரேசிலிய மொழி,
‘சுமார்’ - பெர்சிய மொழி, ‘வயது’ - சமஸ்கிருத மொழி,
‘கில்லாடி’ - மராத்தி மொழி, ‘ஆட்டோ’ - கிரேக்க மொழி,
‘ரிக்சா’ - யப்பானிய மொழி, ‘தகவல்’ - அரபி மொழி,
‘பொலிஸ்’ - இலத்தீன் மொழி, ‘ஏட்டு’ - ஆங்கில மொழி, ‘துப்பாக்கி’ -
துருக்கி மொழி, தோட்டா - உருது மொழி.

எந்த மொழியையும் தமிழன் எற்றுக் கொள்வான் என்பதற்கு இதை விடச்
சான்று தேவையில்லை.

இலங்கையிலும் தமிழன் மொழி இழந்து இனம் மாறிப் போனான் என்பதே வரலாறு. இலங்கை என்பது தூய தமிழ்ச்சொல். இலங்குதல் - ஒளி விடுதல்
என்பது தான் வேர்.

சிங்களவன் இன்று ‘லங்கா’ என இலங்கையை அழைக்கிறான். ‘லக்’ என்ற
வட மொழிச் சொல்லில் இருந்தே ‘லங்கா’ வந்தது என்கிறான் சிங்கள ஆய்வாளன்.

ஆனால்,

காலம் காலமாய்ச் சிங்களவர்களின் பெயர்களிலே ‘இலங்கை’ என்ற தூய தமிழ்ச் சொல் ஒட்டிக் கொண்டிருப்பதை எவருமே சுட்டிக் காட்டுவதில்லை.

இலங்கை ரத்னா, இலங்கை கோன் என்று சிங்களவர் பெயர்கள் உண்டே தவிர- லக்ரத்னா, லக்கோன் என்றோ சிங்களவர் பெயர்கள் உண்டா?

பைந்தமிழ் ஈழத்தில் - மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியமர்ந்த போர்த்துக்கீசர்க்ள் இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்த்துக்கீச மொழியிலேயே உரையாடுகிறார்கள்.

ஆனால்,

150 ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் தீவுக்குப் போன தமிழர்கள் தாய் மொழியாம் தமிழை முற்றிலுமாக மறந்து கிரியோல் மொழிக்காரர்களாய் ஆங்கில மொழிக்காரர்களாய் மாறிப் போனார்கள்.

காலையில் மகனைப் பார்த்து ‘பல்லை Brush பண்ணு’ என்கிறான். பின்பு ‘Body wash பண்ணு’ எங்கிறான். அப்புறம் ‘Tiffin பண்ணு’ என்கிறான். பிறகு ‘Dress பண்ணு’ என்கிறான். பின்பு ‘Ready பண்ணு’ என்கிறான். பின்பு பெரியவரை ‘Meet பண்ணு’ என்கிறான். பிறகு ‘அங்கேயே stay பண்ணிடாதப்பா - Return பண்ணிடு’ என்கிறான்.

இவர்கள் வாயில் பண்ணுதல் என்ற தமிழ்ச்சொல்லை விட்டால் தமிழ் இல்லை.

கடைத்தெருவில் இறங்கினால் ‘ லாண்டரி’, ‘ஏர் கட்டிங் சலூன்’, ‘ஓட்டல்’, ‘எலக்டிரிக்கல்ஸ்’, ‘டைலர்ஸ்’, ‘கம்பனி’, ‘டெக்ஸ்டைல்ஸ்’, இப்படி

நாளேடுகள் வார இதழ்கள் வாங்கப் போனால் ‘ஜுனியர் போஸ்ட்’, ‘இந்தியா ருடே’, ‘ரிப்போட்டர்’, ‘ஹெல்த்’ இப்படி

துணி வாங்கப் போனால் ‘பாண்ட்’, ‘சர்ட்’, ‘ஜீன்ஸ்’, ‘சாறி’, ‘ஜாக்கட்’ இப்படி

அலுவலகத்தில் நுழைந்தால் ‘டைரக்டர்’, ‘கிளார்க்’, ‘பியூன்’, ‘லாக்கர்’, ‘டிராயர்’, ‘பைல்’ ,

பள்ளிக்க்கூடம் போனால் ‘பிரின்சிபால்’, ‘டீச்சர்’, ‘ஸ்டூடன்ஸ்’, ‘கிளாஸ்’, ‘டெஸ்டு’, ‘றிசல்டு’, ‘பாஸ்’, ‘பெயில்’,

ஏதேனும் தொழில் பார்ப்போம் என்றால் ‘அப்பிளிக்கேசன்’, ‘இன்டர்வியூ’, ‘செலக்சன்’, ‘அப்பாயிண்ட்மெண்ட்’, ப்ரோமோசன்’,

விளையாடப் போனால் ‘கிரிக்கெட்’, ‘புட்பால்’, ‘டெனிஸ்’, ‘ஹாக்கி’, ‘செஸ்’,

நோய் வந்தால் ‘ஹாஸ்பிடல்’, ‘டாக்டர்’, ‘நர்ஸ்’, ‘சிஸ்டர்’, ‘ஆப்ரேசன்’ இப்படி

திரையுலகில் நுழைந்தால் ‘சூட்டிங்’, ‘அவுட்டோர்’, ‘இண்டோர்’, ‘கால்சீட்’, ‘மேக்கப்’, கட் கட் கட் இப்படி

முத்தமிழ் விழா மேடையில் கூட முதலில் முழங்குவது
‘மைக் டெஸ்டிங் ஒன் டூ திரீ!’

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருட வருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் ‘Beware of Dogs’ என்று ஆங்கிலத்தில் எழுதி வைக்கிறான் தமிழன்.

எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழியில் ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும்
‘Use Me’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் குப்பைத் தொட்டி கூட இன்று ஆங்கிலம் பேசும் தலைக்குனிவை யாரிடம் சொல்லி அழுவது.....?

இப்படி நாம் 85% க்கும் அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசும் மொழியை தமிழ் என்று அழைக்கலாமா? இது தமிழல்ல தமிங்கிலம். தமிழ்நாட்டில் எங்கும் தமிங்கிலம்........!

-தொடரும்....-

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சமாதானம் மலரவே பொங்கட்டும்.


போர்வெறி நீங்கவே பொங்கட்டும்
புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்
மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்.

மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்
ஒற்றுமையுடன் வாழவே பொங்கட்டும்
ஒரணி சேரவே பொங்கட்டும்
சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்.

சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்
பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமியெங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்
ஏற்றத்தாழ்வு இல்லாதொழியவே பொங்கட்டும்.

எங்களின் வாழ்வு செழிக்கவே பொங்கட்டும்
ஏர் பூட்டி மக்களெல்லாம் உழவு செய்திடவே பொங்கட்டும்
இன்றே எமக்கு விடிவு கிடைக்கவே பொங்கட்டும்
சர்க்கரையோடு தேன் பயறுஞ்சேர்த்து
மெத்தக் கலந்திங்கு பொங்கட்டும்.

புத்தரிசியோடு புதுப்பாலும் சேர்த்துப்
பொன் வெல்லப் பொங்கல் பொங்கட்டும்
பல் தொழில் பெருகி பல வளமும் பெருகவே
பாங்குடனே மக்களனைவரும் பொங்கட்டும்.

சண்டைகள் நீங்கிடவே பொங்கட்டும்
சாதிகள் ஒழிந்திடவே பொங்கட்டும்
சமரசம் நிலவிடவே பொங்கட்டும்
சமதர்மம் கிடைத்திடவே பொங்கட்டும்.

சக்தி பிறந்திடவே பொங்கட்டும்
சம உரிமை கிடைத்திடவே பொங்கட்டும்
புத்தி மிகுந்திடவே பொங்கட்டும்
பூமியில் மக்களனைவரும் அமைதியுடன் வாழவே பொங்கட்டும்
சகோதரத்துவம் நிலைத்திடவே பொங்கட்டும்
சாந்தியோடு சமாதனம் மலரவே பொங்கட்டும்.

சனி, 2 ஜனவரி, 2010

தமிழ்மொழி எம் தாய்மொழி


தமிழ்மொழி எங்கள் தாய்மொழி
தமிழ்மொழி ஒரு தனிமொழி
தமிழ்மொழி ஒர் அழகிய மொழி
தமிழ்மொழி எம் முதன் மொழி
தமிழ்மொழி ஒரு செம்மொழி
தமிழ்மொழி ஒர் இனிய மொழி
தமிழர் தொன்மைக்குச் சான்றான மொழி
தரணி போற்றிடும் தமிழ் மொழி.

இசையிலே இன்பம் கண்ட மொழி
எண் நுட்பங்கள் பல காணும் மொழி
ஓவியங்கள் பல காணும் மொழி
காவியங்கள் இயற்றும் மொழி
இயற்கை அன்னை அருளிய மொழி
இலக்கணங்கள் பல யார்த்த மொழி
இனிதான கலைகளை வளர்த்த மொழி
என்றுமே குறைவில்லாத சிறப்பு மொழி.

நினைத்தால் நெஞ்சினிக்கும் மொழி
சுவைத்தால் நாவினிக்கும் மொழி
கேட்டால் காதுவக்கும் மொழி
கேட்பவரைக் கொள்ளை கொள்ளும் மொழி
நல்ல சுகந்தரும் இதமான மொழி
தேனை நிகர்த்தினிக்கும் மொழி - எங்கள்
அமிழ்தினும் இனிதான தமிழ் மொழி.

உண்மை மிக்க நக்கீரனார் - நல்ல
உரை வகுத்த தமிழ் மொழி
ஊக்கமுள்ள வீரர் தம்மை
உருவாக்குகின்ற தமிழ் மொழி
வண்மை மிக்க பாண்டியன்
வளர்த்தெடுத்த செந்தமிழ் மொழி
பாராண்ட மைந்தர் நாம் - என்றென்றும்
விழா எடுக்கும் தமிழ் மொழி.

பொதிகை மலையிலே தோன்றிய மொழி
தென்னன் புகழிலே கிடந்த மொழி
சங்கப்பலகையில் இருந்த மொழி
வைகை ஏட்டிலே தவழ்ந்த மொழி
முச்சங்கம் கண்ட மொழி
மும்மன்னர் மடியிலே தவழ்ந்த மொழி
பேதை நெருப்பிலே நின்ற மொழி
கற்றோர் நினைவிலே நின்ற மொழி.

கம்பன் கவிபாடிய மொழி
சயங்கொண்டான் பரணி பாடிய மொழி
புகழேந்தி வெண்பா பாடிய மொழி
காடவன் கலம்பகம் பாடிய மொழி
ஓங்காப் புகழ் தொல்காப்பியன் இலக்கணம் யார்த்த மொழி
ஒளவையார் ஆத்திசூடி பாடிய மொழி
வள்ளுவன் குறளை வாய்மை பெற வைத்தமொழி
வாழ்க்கைக்கு நல்ல வளஞ்சேர்க்கும் மொழி.

தன் காலுக்கு சிலப்பதிகாரத்தை உடைய மொழி
தன் கைக்கு வளையாபதியை அணிந்த மொழி
தன் இடைக்கு மணிமேகலையை பூண்ட மொழி
தன் செவிக்கு குண்டலகேசியை பொருத்திய மொழி
உயிர் மெய் ஆய்தமுடன் இயங்கும் மொழி
குறிலும் நெடிலும் இசைந்தாடும் மொழி
வல்லினம் மெல்லினம் கொண்ட வனப்பு மொழி
வாழ்வை வளமாக்கிடும் எம் தாய் மொழி

அறிவியலுக்கும் அறைகூவல் விடுக்கும் ஆற்றல் மிக்க மொழி
மொழியியலுக்குச் சவால் விடுக்கும் திறன் மிக்க மொழி
வேற்றுமொழிகளுக்கும் சொற்கொடை அளித்த மொழி
பலகிளை மொழிகளுக்கு தாய் மொழி
இறைவன் தனித்திருந்து வளர்த்த மொழி
என்றும் அழியா தெய்வீகம் படைத்த மொழி
சொல் ஏர் உழவரின் நாவில் களிநடம் புரியும் மொழி
கால ஊழிக்கும் இயற்கையின் சீற்றத்துக்கும்
ஈடு கொடுத்து வாழும் மொழி.

சொல்வளம் பொருள்வளம் நிறைந்த மொழி
இயலும் இசையும் இனிய கூத்தும் உடைய மொழி
இளமையும் இனிமையும் இணைந்த தேன் மொழி
இலக்கணத்துக்கு தொல்காப்பியத்தைக் கொண்ட மொழி
அறநெறிக்குத் திருக்குறளைத் தந்த மொழி
முதற் குடிமக்கள் காப்பியத்தைப் படைத்த மொழி
நெற்றிக் கண்ணனுக்கும் குற்றம் வரைந்த மொழி
நீடூழி காலங்கள் தமிழ்ப்பணி செய்ய வைத்த மொழி
தமிழே நீ என்றென்றும் வாழ்க வளர்கவே.