ஞாயிறு, 7 மார்ச், 2010

பெண் கவிகள்

You are person read this...

நான் படித்த கவிதைகளிலேயே என் நெஞ்சை உலுக்கிய வரிகள் இவை. இதை வாசகர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

“.....அடுத்த ஆண்டும் வசந்தம்
ஆர்ப்பாட்டமாய் வரும்
அடுத்த ஆண்டும்
கொல்லையில்
தேன் சிட்டு முட்டையிடும்
முட்டையை நேசப்பார்வையில்
அடைகாக்க நானிருக்க மாட்டேன்.
அருவருத்தாலும்
நினைவில்
அசையாமல் நின்று போன அட்டையைக் கண்டலற
நானிருக்க மாட்டேன்.
வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும்
மழை நாள் இரவில்
பேசித்தீர்க்க நானிருக்க மாட்டேன்...
அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்....”
- வெண்ணிலா -

“....கண்ணகியைப் பேச
கண்ணகியே எழுந்திருந்தால்
மதுரைக்குப் போய்
மன்னன் முன் சிலம்பை உடைத்து
தெய்வமாகி இருக்கமாட்டாள்.
புகாரியிலேயே கோவலனின்
மண்டையை உடைத்து
மனுஷியாகி இருப்பாள்.
சீதையைப் பேச
சீதையே எழுந்திருந்தால்
அக்னிப் பரீட்சைக்கு
இராமனையும் இழுத்திருப்பாள்.
ஆம் பெண்ணே
உன்னைப் பேச நீயே எழு.....
- அறிவுமதி -

“....எனக்கு
முகம் இல்லை.... இதயம் இல்லை....
ஆத்மாவும் இல்லை....
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்.... நீண்ட கூந்தல்
சிறிய இடை..... பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல், படுக்கையை விரித்தல்,
குழந்தையைப் பெறுதல், பணிந்து நடத்தல்.
இவையே எனது கடமைகள் ஆகும்.....”
-சங்கரி -

“.... ஆறு மணிக்குள்
அவசரமாய் முடிக்க வேண்டும்.
பெண் விடுதலை பற்றிய என் பேச்சை
ஐந்து நிமிடம் தாமதமாய்ப் போனாலும்
அறை விழும் அவரிடம்.......”
- திலகவதி -

“.....பாவம் இந்த மனைவி
இல்லறக் கிரிக்கட்டில்
சமையலறைக்கும்
படுக்கையறைக்கும்
ரன்கள் எடுத்தே ரணமாய்ப் போனாள்.....”
- வைரமுத்து -

“.....கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும் நீங்கள்
கேட்ட வருணனை கொஞ்சங்களோ
இறக்கை வெட்டிய கிளிகளாய் - நீங்கள்
எத்தனை காலம் இக் கூண்டுக்குள்ளே......”
- இன்குலாப் -

“.....ஆரம்பமாயிற்று
என் மீதான விசாரணை
நடக்க வைத்துப் பார்த்ததில்
புன்னகை பூத்தனர் என்னைப் பிடித்திருப்பதாய்
நீண்டிருந்த பட்டங்களைக் கேட்டபடி
சிற்றுண்டித் தட்டுக்களும் தேநீர்க் கோப்பைகளும் காலியாயின
பற்றியிருக்கும் என் அரசுப் பணியை அறிந்ததும்
கைகளில் திணித்தனர் தாம்பூலத்தை
சம்பள விவரத்தைப் பட்டியலிட
குறித்தே விட்டனர் கல்யாணத் தேதியை
எதற்கும் இருக்கட்டுமென
கவிதை எழுதுவதை கடைசியில் சொல்லி வைத்தேன்.
வந்தவர்கள் எழுந்தனர்
வாயிலை நோக்கி...."
- சுகிர்தராணி -

கருத்துகள் இல்லை: