வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

என்னைச் சுற்றியுள்ள பெண்கள்!


அம்மா

உயிர் உலுக்கி
உலகுக்குள் கொண்டு வந்தாள்..
ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..
என்னைச் செதுக்கித்
தமிழனாய் செய்தாள்!..


தங்கை

எனக்காக அழுவாள்..
என்னையும் அழவைப்பாள்..
என் எச்சம் அருந்தியவள்..
ஆருயிர் நண்பியாயும்
அழகிய உறவாயும்
வந்த...என்
தாய்வீட்டுக் கடமை.


நண்பி

அவசரமாய் வரும்
ஆறுதல் வார்த்தைக்கு
சொந்தக்காரி..என் வெற்றிக்கு
குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..
கல்யாணமான பின்தான் காணாமல்
போய்விட்டாள்!!


காதலி

வற்றாத தமிழ்
வார்த்தைககடலில்
குதித்தாள்;..கரைந்து போகாத
என் காதலை
கவிதையாய் கண்டெடுத்தாள்..
தான் மட்டும் படித்து
பெரும் சுயநலவாதியானாள்!!


மச்சாள்

அனுமதி இல்லாமல்
என்அறைக்குள் நுழையும்
அழகிய திமிர்..சின்ன
சூறாவளி..அப்பப்போது
என் சட்டையையும்
அணிந்துகொள்ளும்!.


மனைவி

எழுத இதழ் தந்தாள்..
கோர்க்க விரல் தந்தாள்..
மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்
இளைப்பாற இடம் தந்தாள்..
இவள் என்னைக் குழந்தையாயும் தந்து
தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்
பின் தரமாய் நிற்கிறாள்!!


அத்தை

உபசரிப்பில் கூட
உபத்திரபவம் தரக்கூடாதென்று
நினைத்து..மெதுவாக
பேசும் இன்னொரு அம்மா!..


சித்தி

தொலைதூரத்தில்
வாழ்ந்து..சுகம்
விசாரித்துக்கொண்டிருந்தாலு
நல்லது கெட்டதிற்கு
ஓடோடி வருவாள்
பக்கத்துவீட்டுக்காரி போல்!!


பாட்டி

திட்டித்திட்டி தீர்த்தாலும்
தேவைக்கு பாக்குப் பெட்டி
திறந்து பணம் தரும்..
வயதான தனலட்சுமி..


மகள்

பிறந்ததும்
பிஞ்சுப்பாதங்களால்
முகத்தில் மிதித்தாள்
இதத்தில் செத்தேன்..
வளர்கையில்
பிஞ்சு விரல்களால்
கன்னம் கிழித்தாள்
சுகத்தில் செத்தேன்..
பருவத்தில் காதல் மோகத்தில்
இதயத்தில் மிதித்தாள்..
நிஜமாய் செத்தேன்!!


மருமகள்

காலைக்கட்டிக்கொள்ளவும்
தோளில்தொற்றிக்கொள்ளவும்
அக்காபெற்ற அழகிய பொம்மை!!


பேத்தி

என்மூக்குக்
கண்ணாடியில் மோகம்
கொண்டவள்..கிழ
முதுகேறி சவாரி
செய்யும் சந்ததி
முத்திரை!...

நன்றி : முகம் தெரியா நண்பனுக்கு....