வியாழன், 24 டிசம்பர், 2009

வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!


அழியாத அன்பொன்றே நட்பு
அன்பான புரிதல் தானே நட்பு
களங்கமில்லாத அன்பே நட்பு- அதைக்
காதலித்தால் வாழ்வே பொற்பு.

காலமெல்லாம் எமை இணைக்கும் நட்பு
கைகோர்த்துக் கடைந்தேறும் நட்பு
மனச்சுமையை இறக்கி வைக்கும் நட்பு
மாசில்லா உந்தன் நெஞ்சு தான் என் தெம்பு.

உள்ளத்து உணர்வொன்றே நட்பு
உயிரெல்லாம் கலந்ததுவே உன் நட்பு
வெள்ளம் போல் வரும் வேதனையை
விடியலாக்கித் தருமந்த நட்பு.

விளைகின்ற பயிராக வளர்கின்றதே உன் நட்பு
வாசமுள்ள பூவெல்லாம் பேசுமுந்தன் நட்பு
வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!

திங்கள், 9 நவம்பர், 2009

போர்க்காலச் சூழ்நிலையில் பாதிப்புற்றோருக்கு உதவுதல்



எமது இன்றைய போர்க்காலச் சூழ்நிலையில் சொந்த மண்ணிலேயே அனாதைகள் ஆக்கப்பட்டு உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, ஆதரிக்க உறவினர் இன்றி அல்லற் படுவோரே பாதிக்கப்பட்டவர்கள் என்ற பார்வைக்கு உட்படுகின்றனர். இவ்வண்ணம் கஷ்டப்படுவோருக்கு உதவுதல் எமது எல்லோருக்கும் உரிய தலையாய கடமையாகும். ஆனால் எமது மண்ணில் இருக்கும் பல மக்களுக்குத் தமது பொறுப்புக்கள் பற்றி உணர முடிவதில்லை. ஏதோ தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருந்து விடுகின்றனர். எமது உடன் பிறப்புக்களுக்கு நாம் உதவாவிட்டால் யார் உதவுவது?
பாதிப்புற்றோருக்கு உதவுவதற்காக இன்று நமது நாட்டில் பல அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வமைப்புக்களால் தனித்து நின்று பாதிப்புற்ற மக்களுக்கு உதவ முடியாது. ஆகவே எம் மண்ணின் மைந்தர்கள் தான் அவர்களின் தோளோடு தோள் நின்று உதவ முன் வர வேண்டும். துள்ளி விளையாடித் திரியும் இளம் நெஞ்சங்கள் பயிலும் பாடசாலைகளில் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமோ, பொது இடங்களில் கூட்டங்களை வைப்பதன் மூலமோ பாதிப்புற்றோரின் அவலங்களையும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகளையும் பற்றி பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாதிப்புற்றோருக்கு உதவும் வழிவகைகள் ஆவன :
அவர்களுக்கு உலர் உணவு வகைகளைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆணைப்பசிக்கு சோள்ப் பொரியேனும் நாம் கொடுக்கலாம். இருக்க உறையுள் இன்றி கஷ்டப்படுவோருக்கு குடில்கள், கொட்டகைகள் அமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியும். படிக்க மனம் இருந்தும் தமது கல்வியைத் தொடர முடியாமல் அல்லல்படும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் அறிவுப் பசியை ஓரளவிற்காவது தீர்க்க முடியும்.

பாதிக்கப்பட்டவர்களினுடைய துன்பங்களில் பங்கெடுப்பதன் மூலம் அவர்களைச் சமுதாயம் தனது கீழ்த்தரமான பார்வை கொண்டு பார்ப்பதைத் தவிர்க்க முடியும். அவர்களின் நலனில் அக்கறையுடைய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடமளிக்க வேண்டும். அத்துடன் அவர்களது புனர்வாழ்வு வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் மன உளைச்சலை ஓரளவிற்காகிலும் போக்க முடியும். இதில் அரசின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையில் இருதரப்பிற்குமிடையே இடம் பெறுகின்ற போரினால் அப்பாவிப் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமரவும் முடியும். இந்த செயற்பாடுகளை சர்வதேசக் கண்காணிப்பளர்கள், அமைப்புக்கள் ஊடாக உற்திப்படுத்த வேண்டும். இது இவ்வாறிருக்க நமது பங்கு என்ன? என்பதையும் நாம் சிந்தித்தல் வேண்டும். நிதியுதவி அளிப்பது ஒரு முக்கியமான செயலாகக் காணப்படுகிறது. ஆனாலும் அது மட்டும் போது என்று நினைத்து விட முடியாது. இவர்களது நிலைமைகளை புரிந்துணர்வோடு கருத்தில் கொண்டு நமது நேசக்கரங்களை நீட்ட வேண்டும். மனித நேயத்தைப் பெருக்கி மனநிறைவினை அவர்களிடம் ஏற்படுத்த நாம் அனைவரும் முன் வர வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இதனை உண்ர்ந்து செயற்பட நாட்டு மக்கள் அனைவரும் முன் வர வேண்டும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

சுதந்திரம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்- நாம்
அடிமையாக வாழ்ந்து விட்டோம்?
இன்னும் எத்தனை ஆண்டுகள்- நாம்
இருட்டில் வாழப் போகின்றோம்?
உயிரைக் காத்து என்ன பயன்?- நாம்
உலகில் வாழ்ந்து மடிவதனால்
எரியும் சாம்பல் தான் மிஞ்சும்- நாம்
ஏற்றம் காண்பதெப்போது?

அடிமையாக வாழ்வதை விட - நாம்
ஆயிரம் படிகள் தாண்டிடுவோம்!
இறைவன் என்பவன் இருக்கும் வரை - நாம்
இன்பம் என்றும் எய்திடுவோம்.
உலகில் காணும் கலைகளை- நாம்
ஊக்கத்தோடு கற்றிடுவோம்.
எளிமை கண்டு இரங்கிடுவோம்- நாம்
ஏற்றம் என்றும் அடைந்திடுவோம்.

அமைதி கொண்டே என்றும்- நாம்
அடிமைப் பேயை ஓட்டிடுவோம்!
இளமை இருக்கும் போதே- நாம்
இழிவு நிலையை நீக்கிடுவோம்.
உணர்ச்சி கொண்டு பொங்கியே- நாம்
உழைப்பை நன்கு வளர்த்திடுவோம்.
ஏழை எளியவர்க்கெல்லாம்- நாம்
எழுதிக் கற்றுக் கொடுத்திடுவோம்.

அகிலம் என்ற அவனியிலே- நாம்
அடிமைத் தீயைப் போக்கிடுவோம்.
இழைக்கும் துயர்கள் யாவற்றையும்- நாம்
இன்பத்தோடு போக்கிடுவோம்.
உழைக்கும் கரங்கள் அவற்றை- நாம்
ஊழி வரை காத்திடுவோம்
எழுதும் கரங்கள் அவற்றை- நாம்
ஏற்றதிற்குக் கொண்டு செல்வோம்.

“சுதந்திரம் ! சுதந்திரம் !” என்றே- நாம்
சுதாகரித்து எழுந்திடுவோம்.
சுற்றமுஞ் சூழலும் இன்புறவே- நாம்
சுகமும் வாழ்வும் கண்டிடுவோம்.
சரித்திரம் ஒன்று படைத்திடுவோம்- நாம்
சாதி வேற்றுமையை ஓழித்திடுவோம்.
சுதந்திர நாட்டை உருவாக்கவே- நாம்
“சுதந்திரம்” என்ற குரல் எழுப்பிடுவோம்!

வெள்ளி, 2 அக்டோபர், 2009

தீர்வு ஒன்று தந்திடு தீபத் திருநாளே.....


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபஒளி ஏற்றிடும் தீபத்திருநாளே!

சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்

சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து

நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே

தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க

திக்கெல்லாம் நம்புகழ் தித்தித்து ஒலிக்க

தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்

அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்

சண்டைகள் யாவும் ஒழிந்து

சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்

பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்

பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்

பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி

பாரில் இன்பம் கொண்டு வாராய்!

அவனியில் தமிழர் எங்கள்

அவலங்கள் யாவும் அகன்றிட

மலர்ந்திடுவாய் தீபத் திருநாளே!

அகதிகள் அனாதைகளாய்

அவதியுறும் அனைவருக்கும்

அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு

ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு

அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி

அகிலத்தில் ஆனந்தமாய் நாம் வாழ

அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

உலகுக்கு ஒளி தருவாயா ஒபாமா!


காலமெல்லாம் கடைத்தேற முடியாத

கறுப்பின மனிதரைக்

காத்திடவென்று பிறந்த

மார்ட்டின் லூதர் கிங் போல்

மால்கம் எக்ஸ் போல்

மார் தட்டிக் கறுப்பினம் மகிழவென

பாரினில் வந்துதித்த ஒபாமாவே

உன்

கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்கும்

ஒடுக்கப்பட்ட சிறு இனங்கள்

உன் வரவில் களிப்படைகிறதே

காத்திடுவாய் என்று காத்திருக்கும்

கடைத்தள்ளிய மக்களனைவரினதும்

கனவுகள் நனவாகும்

ஒரு நாள் நீ அரங்கேறிய திருநாள் அன்று

விழி பூத்திருக்கும் எங்களுக்கு

ஒளியூட்டுவாயோ இல்லை

வெள்ளினம் போல் நீயும் திரும்புவாயோ

ஆப்ரகாம் லிங்கனை அடியொற்றி

அரசேறும் உன் பாதை

மக்கள் நலன் காக்க வழி சேர்க்குமா?

காப்போம் பிள்ளைகளை



வெள்ளை உள்ளம் கொண்ட பிள்ளை
உள்ளதைச் சொல்லும் நல்ல பிள்ளை
உணர்ந்தால் உலகத்தில் நல்ல உள்ளம்
உவந்தால் உன்மத்தம் ஆகும் எம் உள்ளம்
கள்ளமில்லா உள்ளத்தின் தாகம் - அதை
கண்டு தீர்ப்பது எம் விவேகம்
காயம் இல்லாத அதன் வேகம்
காப்பது நம் அனைவரது விவேகம்!

சொல்ல நினைக்கும் அவ் உள்ளத்தின்
உணர்வுகளை உணர்ந்தால் அது நம் விவேகம்
காயம் படாது காப்பது நம் கடமை
கண்ணிமை போல் பார்ப்பது நம் உடமை
பிள்ளைகளே உயர் செல்வம் உலகில் - அதை
பூரிக்கப் பார்ப்பது பெரியோர் கடமை!

அன்பினால் ஆவது எதும் இல்லை
ஆரத் தழுவி அரவணைப்பது ஏது தொல்லை?
இல்லை இல்லை உலகில் செல்வம்
உண்டு என்பது பிள்ளைச்செல்வம்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அளவில்லா அன்பை கொடுப்பதே நம் கடமை
ஆசைக்கும் உண்டாமோ அளவில்
அரவணைத்தால் உணரும் அன்பு உள்ளம்.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

எனது கவிதை





அன்பில் விளைவதும் கவிதை - நல்ல
அழகில் மலர்வதும் கவிதை
பண்பில் விளைவதும் கவிதை - இந்தப்
பாரில் சிறந்ததும் கவிதை.

என்றும் நிலைப்பதும் கவிதை - எழில்
கொண்டே நிகழ்வதும் கவிதை
குன்றில் வரும் அருவி போல - தொடர்
கொண்டே விளங்குவதும் கவிதை .

வாழ்வை உயர்த்துவதும் கவிதை - மொழி
வளத்தை விளக்குவதும் கவிதை
தாழ்வை அகற்றுவதும் கவிதை - நல்ல
தமிழில் அமைவது தான் கவிதை.

தேனை நிகர்த்தினிக்கும் கவிதை - மென்மைத்
தென்றல் என விளங்கும் கவிதை
வானைப்புவி அழகை எல்லாம் - என்றும்
வாரி வழங்குவது கவிதை.

காலம் கடந்து நிற்கும் கவிதை - உயர்
கருத்தை விளக்கி நிற்கும் கவிதை
ஜாலம் சிறக்க வைக்கும் கவிதை - நல்ல
நடையில் அமைவது தான் கவிதை.

கம்பனின் சொல்லில் - அன்று
மலர்ந்தது இனிமையான கவிதை
கவிஜர்கள் உள்ளத்தில் - இன்று
உதிப்பதும் கவிதை.

பள்ளிச் சிறுவனின் படிப்பிலும் கவிதை
பாவேந்தர் பாடும் பாவும் கவிதை
பரம ஏழையின் வறுமையிலும் கவிதை
பலரது மனத்தைக் கவர்ந்திடும் கவிதை.

இயற்கையின் இனிமை உதிர்வது கவிதை
ஈகையை வார்த்தையில் வடித்திடும் கவிதை
வானம் கடல் புவி அழகையெல்லாம்
வாரியெமக்கு வழங்கிடும் கவிதை.

இன்பத்தின் பெருக்கிலோ இன்பக் கவிதை
துன்பத்தின் கொடுமையில் துக்கக் கவிதை
கிடைக்காத ஒன்றிலோ ஏக்கக் கவிதை
திடீரெனக் குதிப்பது வியப்புக் கவிதை.

புலவர்கள் பாடிடும் பொருளே கவிதை
மன்னர்க்குப் புகழைத் தருவதும் கவிதை
ஆடிப்பாடும் கலையழகிலும் கவிதை
நாடி உலகம் சிறப்புறவே கவிதை.

கற்பனைத் தேரின் சிகரமே கவிதை
காவியப் பொருளின் கருவிலும் கவிதை
தரணி போற்றிடும் தமிழின் கவிதை - என்
கற்பனைத் திறனில் பிறந்திடும் கவிதை.