சனி, 13 பிப்ரவரி, 2010

காதலின் உயர்வு


பார்த்தவுடன் வருவது தான் காதல்
பழகியபோது ஒருவரையொருவர்
புரிந்துகொள்வது தான் காதல்
பள்ளிக் காலங்களிலே
இடையிடையே வந்து போகும்
பசுமையான நினைவுகளே
இந்தக் காதல்.

துள்ளித் திரியும் வேளை தன்னில்
சுமைகளையும் சுகங்களையும்
சொல்லித்தரும் சுதந்திர கீதமே காதல்.
பணத்தால் வருவதல்ல
உண்மைக்காதல்
பண்பு, பாசம், நேசம்
சுரக்கும் இன்ப
ஊற்றே காதல்.

கரும்பு போல இனிப்பதே காதல்
கனவுகள் காணும்
விந்தை உலகமே காதல்.
உள்ளமிரண்டும் இணைவதே காதல்
உயிருக்குள் உயிராகும்
உன்னதக் காவியமே
இந்தக் காதல்.

கண்களின் சந்திப்பினால்
கட்டுண்டுறச் செய்த காதல்
கற்பனைகள் ஆயிரம் காண
களமமைத்துத் தந்த
கருவூலமே காதல்!
பருவ இராகங்கள்
பல பாடிடும் காதல்
பாலைவனத்தையும்
பசுமையாக மாற்றும்
அற்புதச் சக்தியே காதல்.

காமம் கொண்டு பழகுவதல்ல காதல்
கனிவாக ஈருயிரும் கலந்துலாவும்
தேசியகீதமே காதல்.
இரு உள்ளங்களின்
மொழியே காதல்.
வாலிபத்தின்
வைர நினைவுகளே காதல்.
வற்றாத இன்ப ஊற்றே காதல்.

ஏமாற்றுவதற்கல்ல காதல்
ஏணியாய்த் தினம்
துணையிருப்பதே காதல்
சொன்னால் இனிமை காதல்
சுகமாய்ச் சிரிப்பதே காதல்
கரும்பு போல இனிப்பது
தான் காதல்
கவி புனைய எமக்குக்
கற்றுத்தந்த ஆசானே காதல்
இளமைக் காலத்தின்
அழியாப் பக்கமான காதலே
என்றும் வருவாய்
எம் துணையாக.....

வியாழன், 11 பிப்ரவரி, 2010

சிவனுக்குகந்த சிவராத்திரி விரதம்.


மாசித்திங்கள் தன்னில்
மாசறு மாதொரு பாகனை
மனதிலெண்ணி
கார் இருள் முழுதும்
கண் விழித்தவன்
கருணை பெறும்
காலமிதுவன்றோ!

படைப்பவன் பிரம்மாவும்
காப்பவன் விஷ்ணுவும்
கணத்தில் தமக்குள்
கணக்கில்லாப் பெருமையுடன்
சோதியவன் பாதமும்
சிரமும் தேடிய இன்னாள்
மானிடரின் மனக்கிலோசமொழித்து
மகிழ்வூட்டும் விரதப்பெருநாள்.

மானிடராய்ப் பிறந்தவுன்
பற்றினைப் பற்றறச்செய்து
மகாதேவன் அவன் புகழ் கூறிப்
போற்றிப் பணிந்து
மனம் வாக்கு காயமதில்
நிலை நிறுத்தி
மாசிலாப் பேறெய்தும்
மகத்தான திருநாள்!

மாந்தரெல்லாம் உடல் துலக்கி
மலர் அள்ளி
நடராஜன் பெயர் சொல்லி
ஊனுருக்கி உள்ளொளி பெருக்கி
வாழ்வதன் பேறெய்தும் ஒருநாள்
மகேசனவன் புகழ் பாடி
மகிழும் இராத்திரி
மகாசிவன் பெருமை கூறும்
மகாசிவராத்திரியாமே!

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....! தொடர்கிறது....


உலகத் தமிழனும் முழுஅளவில் தமிங்கிலத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறான்.

‘மம்மி’, ‘டாடி’, ‘அங்கிள்’, ஆண்டி’, என்று அவன் குழந்தைகள் பெற்றோரை உறவினர்களை அழைப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அவனுக்கு..

எப்போதாவது இலண்டனுக்குத் தன்னைப் பார்க்கத் தமிழீழத்தில் இருந்து உறவினர்கள் வரும் போது அவர்களிடம் ‘என் பிள்ளைக்கு தமிழ் கொஞ்சம் கூட பேச வராது’ என்று சொல்லிக் கொள்வதில் எல்லையில்லாப் பெருமை.

தன் பிள்ளைகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத வைத்துத் தன்னையே மறக்கிறான் தமிழன்.

தமிழன் வீழ்ச்சிக்கும் தமிழின் வீழ்ச்சிக்கும் தமிழனே வாசல் திறக்கிறான்.

இலங்கைத் தீவு முழுவதிலுமே 1956 ஆம் ஆண்டுதான் தனிச் சிங்களத்தை இன வெறிச்சிங்களவர்கள் ஆட்சிமொழியாக்கினார்கள்.

அதே 1956 இல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த பேராயக்கட்சி தமிழை ஆட்சி மொழியாக்கியது.

சிங்களவனைப் பொறுத்தவரை அவன் தனது தாய் மொழியை ஆட்சி மொழியாக்கிச் சிங்களத்தை உயர்த்தி விட்டான்.

எங்கும் எதிலும் சிங்களம் என்றாகி விட்டது.

ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றிச் சிங்களவனுக்கு 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. தமிழ் நாட்டானுக்கும் 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. சிங்களவன் மொழிப்பற்றையும் நம் மொழிப்பற்றையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழ் நாட்டில் செத்துக் கிடக்கிறது.

கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் ஒரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய ஆங்கிலம் ஆட்சிமொழி.
கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் இன்னொரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய சிங்களம் ஆட்சி மொழி.

தலை குனிய வேண்டும் தமிழன்.

பிரான்ஸ் நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது. ஜேர்மனிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ஜேர்மனி தெரிகிறது. ரஷ்ய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ரஷ்யா தெரிகிறது. தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது மட்டும் இங்கிலாந்து அல்லவா தெரிகிறது.

உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும் தமிழன்.

இனியும் தமிழின் அருமை மறந்து வாழ்தல் தமிழர்க்கு இழிவு பயப்பதாகும்.

நயாகரா நீர்வீழ்ச்சியில் ‘நல்வரவு’ எனத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதாம். கேட்போரிடம் ‘உலகின் மூத்த மொழியான தமிழை உலகின் உயர்ந்த நீர்வீழ்ச்சியான நயாகராவில் எழுதி வைத்திருக்கிறோம்’ என்கிறார்களாம்.

யப்பானியப் பல்கலைக்கழக வாயில் முகப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்னும் சங்கத் தமிழ்ப் பாடல் வரியை மொழிபெயர்த்து யப்பானியர் எழுதி வைத்துள்ளனராம்.

ஜெருசேலம் நகரில் உள்ள ஒலிவ மலையில் கிறிஸ்த்தவக் கோயில் ஒன்றில் ஜேசு கற்பித்த வழிபாட்டுக் கருத்து உலகிலுள்ள அறுபத்தெட்டு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறதாம். அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளதாம்.

புத்தர் தமிழ் படித்தார். என்று மிகப்பழைய வடமொழி நூலான ‘இலலித விசுதாரம்’ தமிழைப் புகழ்ந்து பேசுகிறதாம்.

என் கல்லறையில் ‘ ஒரு தமிழ் படித்த மணவன்’ என எழுதி வையுங்கள். என்று மேனாட்டாரான தமிழறிஞர் போப் தனது மறைவுக்கு முன்பு நண்பர்களிடம் எடுத்துரைத்தாராம்.

‘திருக்குறளைப் படிக்க நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்’. என்க் காந்தியடிகள் திரும்பத் திரும்பக் கூறுவாராம்.

மற்றவர்களுக்கெல்லாம் தமிழின் அருமை பெருமை தெரிகிறது. உற்றவர்களுக்கு மறந்து போயிற்றே.

இன்னொன்று -

அடுத்தவர்களெல்லாம் தமிழைப் போற்றியிருக்கிறார்கள். என்பது ஒரு புறம் உண்மை தான் எனினும் அவர்களில் யாராவது தங்களைத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?

குமரிக் கண்டத்திலிருந்து உலகம் முழுவதும் பரவிய காலம் முதல் இற்றை வரை தமிழன் தான் போன போன இடங்களிலெல்லாம் ஆங்காங்குள்ள இனத்தவனாய் மாறிப் போனானே தவிர அடுத்தவன் தமிழனாய் மாறினான் என்ற குறிப்பு வரலாற்றில் எங்குமே இல்லை.

தமிழனால் தமிழ் அழிந்தது. என்பது நமது நேற்றாக இருந்தது.

தமிழனால் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. என்பது நமது இன்றாக இருக்கிறது.

தமிழனால் தமிழ் மீட்கப்பட்டது. என்பது நமது நாளையாக இருக்கட்டும்.

- முற்றும்-

(காசி ஆனந்தனின் “ தமிழனா... திமிங்கிலனா? ” என்ற நூலில் இருந்து.....)