அன்பில் விளைவதும் கவிதை - நல்ல
அழகில் மலர்வதும் கவிதை
பண்பில் விளைவதும் கவிதை - இந்தப்
பாரில் சிறந்ததும் கவிதை.
என்றும் நிலைப்பதும் கவிதை - எழில்
கொண்டே நிகழ்வதும் கவிதை
குன்றில் வரும் அருவி போல - தொடர்
கொண்டே விளங்குவதும் கவிதை .
வாழ்வை உயர்த்துவதும் கவிதை - மொழி
வளத்தை விளக்குவதும் கவிதை
தாழ்வை அகற்றுவதும் கவிதை - நல்ல
தமிழில் அமைவது தான் கவிதை.
தேனை நிகர்த்தினிக்கும் கவிதை - மென்மைத்
தென்றல் என விளங்கும் கவிதை
வானைப்புவி அழகை எல்லாம் - என்றும்
வாரி வழங்குவது கவிதை.
காலம் கடந்து நிற்கும் கவிதை - உயர்
கருத்தை விளக்கி நிற்கும் கவிதை
ஜாலம் சிறக்க வைக்கும் கவிதை - நல்ல
நடையில் அமைவது தான் கவிதை.
கம்பனின் சொல்லில் - அன்று
மலர்ந்தது இனிமையான கவிதை
கவிஜர்கள் உள்ளத்தில் - இன்று
உதிப்பதும் கவிதை.
பள்ளிச் சிறுவனின் படிப்பிலும் கவிதை
பாவேந்தர் பாடும் பாவும் கவிதை
பரம ஏழையின் வறுமையிலும் கவிதை
பலரது மனத்தைக் கவர்ந்திடும் கவிதை.
இயற்கையின் இனிமை உதிர்வது கவிதை
ஈகையை வார்த்தையில் வடித்திடும் கவிதை
வானம் கடல் புவி அழகையெல்லாம்
வாரியெமக்கு வழங்கிடும் கவிதை.
இன்பத்தின் பெருக்கிலோ இன்பக் கவிதை
துன்பத்தின் கொடுமையில் துக்கக் கவிதை
கிடைக்காத ஒன்றிலோ ஏக்கக் கவிதை
திடீரெனக் குதிப்பது வியப்புக் கவிதை.
புலவர்கள் பாடிடும் பொருளே கவிதை
மன்னர்க்குப் புகழைத் தருவதும் கவிதை
ஆடிப்பாடும் கலையழகிலும் கவிதை
நாடி உலகம் சிறப்புறவே கவிதை.
கற்பனைத் தேரின் சிகரமே கவிதை
காவியப் பொருளின் கருவிலும் கவிதை
தரணி போற்றிடும் தமிழின் கவிதை - என்
கற்பனைத் திறனில் பிறந்திடும் கவிதை.