தீபஒளி ஏற்றிடும் தீபத்திருநாளே!
சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்
சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து
நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே
தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்
திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க
திக்கெல்லாம் நம்புகழ் தித்தித்து ஒலிக்க
தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!
அண்டை அயலவர் சுற்றமெல்லாம்
அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்
சண்டைகள் யாவும் ஒழிந்து
சமாதானம் சமரசம் நிலவிடவும்
பாரினில் தமிழர் தங்கள்
பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்
பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்
பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்
பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி
பாரில் இன்பம் கொண்டு வாராய்!
அவனியில் தமிழர் எங்கள்
அவலங்கள் யாவும் அகன்றிட
மலர்ந்திடுவாய் தீபத் திருநாளே!
அகதிகள் அனாதைகளாய்
அவதியுறும் அனைவருக்கும்
அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு
ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!
அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு
அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி
அகிலத்தில் ஆனந்தமாய் நாம் வாழ
அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக