வியாழன், 24 நவம்பர், 2011

பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த சேவையாளன்!


குரும்பையூர் பெற்றெடுத்த குணம் குன்றா
குவலயம் போற்றும்
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின்
உயர் சொத்து
எம்மை விட்டு பிரிந்த செய்தி கேட்டு
ஏங்கித் தவிக்கிறது
எம் உள்ளங்கள்...

நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
ஆக்கம், ஆளுமை, அன்பு, அறிவுடைமை
அத்தனையும் ஒருங்கு சேரப் பெற்ற
கல்வி உலகின் கலங்கரை விளக்கே...

உயிருள்ள காலம் வரை
ஆ. சி நடராஜா என்ற உங்கள் அழகிய
நாமத்துக்கு எம் நெஞ்சம் தலை வணங்கும்...

உங்கள் மேல் நாம் வைத்த
உண்மை அன்பின் மீது ஆணை ஐயா
அதிபர் என்ற சொல்லுக்கு அகராதியில் அர்த்தம் தேடினோம்
கண்டு பிடிக்க முடியவில்லை...

இவரிடம் கண்டு கொண்டோம் அதனால் அக மகிழ்ந்தோம்...
பதவி என்ற அந்தஸ்தைப் பாவித்து
பல அராஜகங்களை அரங்கேற்றும்
இத்தேசத்தில் பண்பு நெறி தவறாமல்
பாங்குடனே சேவையாற்றிய வித்தகரே...

பத்திரிகைத் துறை வளர்ச்சியில்
பல்திசையும் போற்ற
நீங்கள் பெற்ற பக்குவமோ
சொல்லில் அடங்காதது...

ஆதரவற்ற ஏழை மக்களை அரவணைத்து
கருணைப்பாலம் மூலம் கரங் கொடுத்து
எத்தனை இடர் வந்தபோதும்

இடப்பெயர்வால் அடுத்தடுத்து
இடம் மாறிச் சென்ற போதும்

கல்லூரியின் தனித்துவத்தை
கட்டிக் காத்த பெருந்தகையாளனின்
காலை மாலை நேரம் பாராது
கல்வி, சமூச சேவையில்
முன்மாதிரியாகத் திகழ்ந்த
ஒப்பற்ற மனத்தினனை
சத்தமில்லாமல் தழுவிச் சென்ற
அந்தக் காலனும் ஓர் சதிகாரனோ...

நாடகத்தில் நல்ல நடிகனாய்
விளையாட்டில் யாவரும் மெச்சிடும் வீரனாய்
கடமை தவறாத கண்ணியவனாய்
நீண்டதோர் சரித்திரம் படைத்த
காவிய நாயகனே...

இருவிழிகள் நீர் ததும்ப விடை தந்தோம்
பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த
உங்களின் ஆன்மா
இறைவனின் பொற்பாதங்களில்
சாந்தியடைய பெற பிரார்த்திக்கிறோம்...

குறிஞ்சிக்கவி செ. ரவிசாந் (வயாவிளான் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவன்)

சனி, 19 நவம்பர், 2011

உன்னை மட்டும்...!


நினைவுகள் நெருஞ்சி
முள்ளாய்க் குத்த
நிர்மூலமாகிக் கொண்டிருக்கும்
என் வாழ்வில்
நிம்மதிக்கேது இடம்?

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே சுமந்தபடி
உன் வரவை
எதிர்பார்த்துக் காத்திருப்பது
இன்னும் எத்தனை காலம்?

துடிக்கின்ற இதயத்தின்
துடிப்பாக நீ இருப்பாய் என்று
அல்லவா நான் நினைத்தேன்.

என்னைத் துடிக்க விட்டு
சென்ற காரணம்
என்னடி என் பிரியசகி...

போகட்டும்...

என்னைப் பிரிவது தான்
உனக்குச் சுகமானதென்றால்
விட்டு விடுகிறேன்...

உன் நினைவுகளையல்ல
உன்னை மட்டும்!

வியாழன், 20 அக்டோபர், 2011

ஆணின் பார்வையில் பெண்...!


உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்..

-சுதேசன்-

சனி, 9 ஜூலை, 2011

உலகத் தமிழினத்தின் உயிர் நாடி பேராசான் சிவத்தம்பி!


இறப்பைத் தடுக்க எவரால் முடியும்
எனினும் அழுகின்றோம்...
பிறப்பால் உயர்ந்த பெரியார்
பேராசிரியர் சிவத்தம்பி ஐயாவின்
இறப்பை எண்ணி பெரிதும்
வருந்துகின்றோம்...

தமிழ் மக்களின் ஆய்வியல் அடையாளமாய்
மும்மொழிகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற
முத்தமிழ் அறிஞராய்...
எம் தேசத்துக்கு நீங்கள்
ஆற்றிய பணிகள் ஒன்றா இரண்டா...


உலக மொழிகளுக்கெல்லாம் ஈழத்தமிழின்
சுவையை உணர வைத்த உத்தமர்...
பிறமொழிச் சொற்களை
தமிழ்ப் படுத்துவதில் வெற்றி கண்ட வித்தகர்...
இன்று எம்முடன் இல்லை
என்பதை ஏற்க மறுக்கிறது உள்ளம்...

வளமான சிந்தனையும்
சிறப்பான எண்ணங்களும்
கொண்டு திக்கெட்டும் புகழ் பரப்பி
நீங்கள் செய்த சாதனைத் தமிழ்ப் பணிகள்
பாருள்ளவரை நிலைத்திருக்கும் இது உறுதி...

யோகர் சுவாமிகளால்
ஆசீர்வதிக்கப்பட்ட யோக புரிசராய்...
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற புலமைகளின் பொக்கிசமாய்...

இலக்கிய வானிலே ஒளிவீசிப்
பிரகாசித்த உங்களின் இழப்பு...
ஒட்டு மொத்த கலை உலகுக்கும்
ஈடு செய்ய முடியாத இடை வெளியை
ஏற்படுத்திய பேரிழப்பு...

காலத்தால் அழிக்க முடியாத எழுத்துக்களின்
கலங்கரை விளக்கமாய்
நன்னெறி காட்டி உபதேசங்கள் பல புரிந்து
பேராசிரியர்க்கெல்லாம் பேராசானாய்...

இரக்க மனமும் கசிந்துருகச்
செய்யும் இலக்கிய வளமும்
இனிமையான சொற்பேச்சும்
காணமல் போனது கண்டு
கலைகளின் அதிபதியும் ஒருகணம்
கலங்கித் தான் போனாளோ...

கடல் நீர் வற்றிப் போக கண்ணீர் மழை வந்து
மனித முகங்களை நிறைத்ததுவோ...
பல்துறை ஆளுமை விற்பன்னராய்...
தோண்டத் தோண்ட பலன் கொடுக்கும்
அனைத்துத் துறை ஆய்வுகளின் அற்புதச் சுரங்கமாய்...

எம் இதயங்களை வென்ற
இமயம் சாய்ந்து போன
செய்தி கேட்டு வெந்த புண் போல
எம் மனம் வெதும்பித் தவிக்கிறது...

பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்து
பார் போற்றும் வண்ணம் தமிழ்ப் பணிகள்
ஆற்றி நின்ற உவமை சொல்ல முடியாத
உலகப் புகழ் பெற்ற உததமரே
அடுத்த ஒரு பிறப்பிருந்தால்
நீவிர் ஈழத்தில் வேண்டும் மீண்டும்...
நன்றியுடன் தருகிறோம் உமக்கு இறுதி விடை...

-குறிஞ்சிக்கவி செ. ரவிசாந், குப்பிளான்-

புதன், 18 மே, 2011

அழியாத ஆன்மாக்கள்...!


சின்னம் சிறு பாலகர்கள்
சிரிப்பிழந்த மழலையர்கள்
தள்ளாடிடும் முதியவர்
தாய்மை உள்ளங்கள்
என்று வாழ்வின் வசந்தங்களையே
இடையில் பறி கொடுத்த
பாவப்பட்ட மனித ஜீவன்கள்
அத்தனை பேருமே
எங்கே என்று தேடுகிறீர்களா...?

அதோ பாருங்கள்
மண்ணில் முளை விடும்
விதைகளாய்
வானில் மின்னும் நட்சத்திரங்களாய்
வலம் வருவது யார் என்று...!

எத்தனை எதிர்பார்ப்புக்களுடனும்
கனவுகளுடனும் வாழ்ந்திருப்பார்கள்...
இருந்தும் என்ன பயன்...
சொந்த நாட்டில் சுதந்திரமாக
வாழ அனுமதி
மறுக்கப்பட்ட அப்பாவிகளல்லவா
இவர்கள்...

அவலச் சாவு தம்மை
நெருங்குவதை அறிந்திருந்தும்
உரிமைக்கான பயணத்தில்
உத்வேகம் குறையாத உத்தமர்களே...

உங்களை நெஞ்சிருக்கும் வரை மறவோம்..
முகவுரை எழுத முன்னரே
முடிவுரை எழுதி
அந்தரித்துப் போன ஆத்மாக்கள்

இன்னமும் அழியவே இல்லை
அவர்கள் எம் மத்தியில்
ஏதோ ஒரு வடிவில்
இன்னமும் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறார்கள்...

ஞாயிறு, 8 மே, 2011

அம்மாவுக்காக...

ஞாயிறு, 1 மே, 2011

மேன் மக்கள் தினம்...!


தொழிலாளர் தினம்...
மேன்மைமிகு உழைப்பாளர்களை
மேதினியில் ஏற்றிப் போற்றும் தினம்...
பாலையை சோலையாக்கி பாரினை
உரமாக்கும் மேன்மக்கள் தினம்...

உரிமைக்காக குரல் எழுப்பி
உழைப்புக்கு வழி தேடி
தொழிலாளர்கள் ஒன்றிணைந்த இந்நாளில்
உழைப்பு என்னும் உளியால்
உலகை மாற்றியமைத்த உத்தமர்கள் புகழ் பாடும்...

விடா முயற்சியுடனே வியர்வைத் துளிகளும் சேர்த்து
நம்மூர் விளை நிலங்களை உழுது சமப்படுத்தி
திரைகடல் கடந்து திரவியம் தேடி
நம் தேசத்தின் பொருளாதாரத்தை வளம் படுத்துவோம்...

உழைப்பாளர் நலம் பெறவும்
ஊதியம் சரிவர கிடைத்திடவும்
உற்ற துணையாய் என்றும் இருந்திடும் இத்தினம்...

உழைப்பாளர் பெருமையை இந்த உலகம் முழுவதும்
பறை சாற்றுவோம் இப்பொன் நாளில்...