கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

காத்திருப்பு !


உனக்காக காத்திருப்பது
நான் மட்டுமல்ல
உனது நினைவுகளைச்
சுமக்கும்
எனது இதயமும் தான் !

காத்திருக்கும் காதல்
சுகமானது
காலமெல்லாம்
காக்க வைக்கும்
காதல் ரணமானது !

காத்திருப்போம்
காதலிப்போம்
காதல் உலகம் கண்டு
மகிழ்வோம் !

திங்கள், 2 ஏப்ரல், 2012

என் காதல் தேசம் !

என்னைப் பார்த்துப்
பலரும் கேட்கிறார்கள்
நீ யாரையாவது
காதலிகிறாயா என்று!
எப்படிப் புரியவைப்பேன்....?

என் இதயத்தில்
கோயில் கட்டி
பூஜை செய்யும்
என் உயிர் காதலி
அழகிய என் தேசமென்று...!

மீண்டும் சந்திப்போம்!


நட்பென்ற இனிய சோலையிலே
நடை பயின்று நாம் இருவரும்
இன்று பிரிவென்ற
மூன்றேழுத்தால்
பேதலித்து நிற்கின்றோம்...

உன்னைக் காணாத
என் முகம் இன்று
திருந்தி இருந்தும்
எரியாத விளக்காக
பிரகாசிக்க மறுக்கின்றது!

அன்பு என்ற பாலைவனத்தில்
திசை தெரியாப் பறவைகளாய்
நாமிங்கு...

அடுத்த பிறப்பென்று
ஒன்றிருந்தால்
மேகத்தில் ஒன்றாக
நானும் நீயும் சந்திப்போம்!

சனி, 19 நவம்பர், 2011

உன்னை மட்டும்...!


நினைவுகள் நெருஞ்சி
முள்ளாய்க் குத்த
நிர்மூலமாகிக் கொண்டிருக்கும்
என் வாழ்வில்
நிம்மதிக்கேது இடம்?

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே சுமந்தபடி
உன் வரவை
எதிர்பார்த்துக் காத்திருப்பது
இன்னும் எத்தனை காலம்?

துடிக்கின்ற இதயத்தின்
துடிப்பாக நீ இருப்பாய் என்று
அல்லவா நான் நினைத்தேன்.

என்னைத் துடிக்க விட்டு
சென்ற காரணம்
என்னடி என் பிரியசகி...

போகட்டும்...

என்னைப் பிரிவது தான்
உனக்குச் சுகமானதென்றால்
விட்டு விடுகிறேன்...

உன் நினைவுகளையல்ல
உன்னை மட்டும்!

புதன், 18 மே, 2011

அழியாத ஆன்மாக்கள்...!


சின்னம் சிறு பாலகர்கள்
சிரிப்பிழந்த மழலையர்கள்
தள்ளாடிடும் முதியவர்
தாய்மை உள்ளங்கள்
என்று வாழ்வின் வசந்தங்களையே
இடையில் பறி கொடுத்த
பாவப்பட்ட மனித ஜீவன்கள்
அத்தனை பேருமே
எங்கே என்று தேடுகிறீர்களா...?

அதோ பாருங்கள்
மண்ணில் முளை விடும்
விதைகளாய்
வானில் மின்னும் நட்சத்திரங்களாய்
வலம் வருவது யார் என்று...!

எத்தனை எதிர்பார்ப்புக்களுடனும்
கனவுகளுடனும் வாழ்ந்திருப்பார்கள்...
இருந்தும் என்ன பயன்...
சொந்த நாட்டில் சுதந்திரமாக
வாழ அனுமதி
மறுக்கப்பட்ட அப்பாவிகளல்லவா
இவர்கள்...

அவலச் சாவு தம்மை
நெருங்குவதை அறிந்திருந்தும்
உரிமைக்கான பயணத்தில்
உத்வேகம் குறையாத உத்தமர்களே...

உங்களை நெஞ்சிருக்கும் வரை மறவோம்..
முகவுரை எழுத முன்னரே
முடிவுரை எழுதி
அந்தரித்துப் போன ஆத்மாக்கள்

இன்னமும் அழியவே இல்லை
அவர்கள் எம் மத்தியில்
ஏதோ ஒரு வடிவில்
இன்னமும் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறார்கள்...

ஞாயிறு, 1 மே, 2011

மேன் மக்கள் தினம்...!


தொழிலாளர் தினம்...
மேன்மைமிகு உழைப்பாளர்களை
மேதினியில் ஏற்றிப் போற்றும் தினம்...
பாலையை சோலையாக்கி பாரினை
உரமாக்கும் மேன்மக்கள் தினம்...

உரிமைக்காக குரல் எழுப்பி
உழைப்புக்கு வழி தேடி
தொழிலாளர்கள் ஒன்றிணைந்த இந்நாளில்
உழைப்பு என்னும் உளியால்
உலகை மாற்றியமைத்த உத்தமர்கள் புகழ் பாடும்...

விடா முயற்சியுடனே வியர்வைத் துளிகளும் சேர்த்து
நம்மூர் விளை நிலங்களை உழுது சமப்படுத்தி
திரைகடல் கடந்து திரவியம் தேடி
நம் தேசத்தின் பொருளாதாரத்தை வளம் படுத்துவோம்...

உழைப்பாளர் நலம் பெறவும்
ஊதியம் சரிவர கிடைத்திடவும்
உற்ற துணையாய் என்றும் இருந்திடும் இத்தினம்...

உழைப்பாளர் பெருமையை இந்த உலகம் முழுவதும்
பறை சாற்றுவோம் இப்பொன் நாளில்...

வெள்ளி, 28 ஜனவரி, 2011

வேதனைத் தூவானம்...


இக்கவிதை இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல், Saturday mail ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தது.

(கவிதையை பெரிதாக்கிப் பார்க்க கவிதையின் மேல் மவுசை வைத்து கிளிக் செய்யவும்)

திங்கள், 22 நவம்பர், 2010

துகிலுரியும் துச்சாதனர்களின் தலை கொய்வோம்!



அதிகாரம் கொண்ட அந்நியர்களின்
கோரப் பிடிக்குள் அகப்பட்ட
அபலைகளின் வாழ்வு - இன்று
கண்ணீரால் சூழப்பட்டும்
கவலைகளால் நிரப்பப்பட்டும்
யாரும் தேடுவாரற்றுக் கிடக்கிறது!


வலுக்கட்டாயமான
பாலியல் இம்சைகளுக்குள்
வலிந்து தள்ளப்படும் - எம்
வனிதையர் வாழ்வு கண்டு
வளர்ந்து வரும் எம் இளநெஞ்சம்
கொதியாய் கொதிக்கிறது!
ஏ! சமுதாயமே! இன்னும்
எத்தனை காலங்களுக்குத் தான்
உன் கண் முன்னால் நடக்கும்
அநியாயங்களையும் அக்கிரமங்களையும்
கண் கட்டி வாய் பொத்தி
மௌனியாய் பார்த்திருக்கப்
போகிறாய்...?


உரிமைகள் தர மறுத்ததால்
உன் உணர்வுகளும் ஒன்றாக
பலிக்கடா ஆக்கப்பட்டு
விட்டதா...?


எங்களுர்ச் சீதைகள்
மாற்றான் தோட்டத்து மல்லிகையாக
மணம் பரப்பினால்
எம்மூர் ராமர்களின் நிலை
என்னாவது ...?


எம் வாழ்வின் வசந்தங்களை
எவனோ ஒருவன் வலுக்கட்டாயமாக
அனுபவித்துப் போக
இன்னும் எத்தனை காலங்கள் தான்
நாம் அனுமதி வழங்கிக்
காத்திருப்பது...?


எங்கள் உடன்பிறந்தவர்களின்
உயிரணுக்குள்
இரத்த சம்பந்தமே இல்லாத
எங்களின் நிரந்தர எதிரிகள் உடலில்
ஐக்கியமாக விட்டு விட்டு
அடங்கிக் கிடக்க நாமென்ன
ஆண்மையற்ற பேடிகளா?


செம்மணியில் அன்று கிருஷாந்தி
வேலணையில் இன்று தர்ஷிகா
நாளை யார் யாரோ!


இவர்கள் அனுபவித்த அவலநிலை
நாளை எங்கள் உறவுகளுக்கு
ஏற்படாது என்பதற்கு
என்ன தான் இங்கு உத்தரவாதம்?


கல்யாணக் கனவுகளை கண்களில் சுமந்து
அகதி முகாம்களில் அடைக்கலம்
தேடிய அரிவையர் வாழ்வு
காமுகரின் காமத்தனத்தால்
களவாடப்பட்டதால் கனவாய் போன
காரிகையர் வாழ்வை
ஒரு கணம் நினைத்து பார்த்தாயா...?


என்ன பாவம் செய்தார்கள்
எங்கள் சொந்தங்கள்... ?
இனியும் வேண்டாம்
எம் குலப் பெண்களுக்கு
இப்படியொரு இழி நிலை

வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சும் வகையில்
செயற்படும் துகிலுரியும்
துச்சாதனர்களின் தலை கொய்யும்
தருணம் வந்து விட்டது!


தையலரின் விழிநீர் துடைக்க
தமிழுணர்வுள்ள நாமனைவரும்
ஒன்றிணைவோம்!


தமிழ் மங்கைகளின் தன்மானம்
மண் மீதினில் என்றும்
நிலை பெற வழி செய்வோம்!


-ஆக்கம் - செல்வநாயகம் ரவிசாந்-

திங்கள், 8 நவம்பர், 2010

இடம்பெயர்ந்தோர் என்று...


பண்பும் பாசமும் புற்றெடுத்து
பருவ காலங்கள் தோள் சுமந்து
இன்பம் துன்பம் இரண்டுடனும்


இல்லறத்தில் நாமிணைந்து
இருவர் நாமும் பெற்றெடுத்த
மழலையுடன் மனக் கோட்டையை
மாளிகையாய் கட்டிவைத்து


தினம் தினம் கோலமிட்ட கனவுகளை
நனவாக்க காத்திருந்தோம் பல காலம்,
ஆனாலும் அவை யாவும் ஒருநாளில்
செல்லரித்தது போலச்
செல்லடித்து வீழ்ந்ததுவே!


கனவெல்லாம் கனவேயாகிக்
காணாமல் போனது போல்;
நினைவினிலே நீயும் நானும்
நிஜத்தோடு போரிடமுடியாது;


பெட்டி படுக்கையும் கையுமாய்
நிழல் தேடி நடக்கின்றோம்
கனவெல்லாம் நனவாகுமென்ற
கனமான நம்பிக்கையுடன்...

வெள்ளி, 15 அக்டோபர், 2010

கிரிக்கெட்டில் ஓர் முடி சூடா மன்னன்!



சுழல் பந்து வீச்சு
முரளிதரன் வாழ்வில்
இது தந்தது
மிகப்பெரும் எழுச்சி!


தொடமுடியாத சிகரங்களை
தொட்ட முதல் வீரன்
மட்டுமா எங்கள் முரளி?


கிரிக்கெட் உலகினில்
கொடி கட்டிப்பறந்ந
முதல் தமிழனும் கூட....!


தூஸ்ரா சர்ச்சையை
துணிவுடன் எதிர்கொண்டு
சோதனைக் களங்களை
சாதனைக் களங்களாக
மாற்றிக் காட்டியவன்!


சர்வதேச அளவில்
தனது அணியை
தலை நிமிரவைக்க
தூண்டு கோலாய் அமைந்த
முரளியின் உலக சாதனையை
முறியடிக்க இனி
எவரால் முடியும்?

சதத்திற்கு ஒரு சச்சின்
அதிரடிக்கு ஒரு செவாக் என்றால்
சுழல் பந்து வீச்சுக்கு உலகில்
ஒரே ஒரு முரளி மட்டும் தான்!


எங்கு பழகி கொண்டாயோ
இப்படி ஒரு வித்தையை?


எறிந்தால் போதும் ஒரே நாளில்
பல விக்கெட்டுகள் காலில்
எண்ணூறு விக்கெட்டுகள் என்ற
உனது இமாலய சாதனை
எங்கள் நாட்டுக்கு கிடைத்த
மிக பெரிய உலக அங்கீகாரம்

ஓய்வு பெறும் உன் அறிவிப்பு
உனது இரசிகர்களிடையே இதனால்
நீடிக்கின்றது ஒரு வித பரபரப்பு


கிரிக்கெட் உலகினில்
தலை சிறந்த உன் பந்து வீச்சை
மீண்டும் காண எம் கண்கள்
நீண்ட தவமிருகின்றன ...


தடைகளை தகர்த்து
தனக்கென தனி முத்திரை பதித்த
முரளியே கிரிக்கெட் சாம்ராஜியத்தில்
நீதான் என்றும் முடி சூடா மன்னன்!


கடலைகள் ஓய்ந்தாலும்
உனது சாதனைப்பயணம்
ஓயாது தொடர கோடான கோடி
உனது இரசிகர்கள் சார்பாக
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உனக்குப் பல கோடி ...


செல்வநாயகம் ரவிசாந்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

என்னைச் சுற்றியுள்ள பெண்கள்!


அம்மா

உயிர் உலுக்கி
உலகுக்குள் கொண்டு வந்தாள்..
ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்..
என்னைச் செதுக்கித்
தமிழனாய் செய்தாள்!..


தங்கை

எனக்காக அழுவாள்..
என்னையும் அழவைப்பாள்..
என் எச்சம் அருந்தியவள்..
ஆருயிர் நண்பியாயும்
அழகிய உறவாயும்
வந்த...என்
தாய்வீட்டுக் கடமை.


நண்பி

அவசரமாய் வரும்
ஆறுதல் வார்த்தைக்கு
சொந்தக்காரி..என் வெற்றிக்கு
குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி..
கல்யாணமான பின்தான் காணாமல்
போய்விட்டாள்!!


காதலி

வற்றாத தமிழ்
வார்த்தைககடலில்
குதித்தாள்;..கரைந்து போகாத
என் காதலை
கவிதையாய் கண்டெடுத்தாள்..
தான் மட்டும் படித்து
பெரும் சுயநலவாதியானாள்!!


மச்சாள்

அனுமதி இல்லாமல்
என்அறைக்குள் நுழையும்
அழகிய திமிர்..சின்ன
சூறாவளி..அப்பப்போது
என் சட்டையையும்
அணிந்துகொள்ளும்!.


மனைவி

எழுத இதழ் தந்தாள்..
கோர்க்க விரல் தந்தாள்..
மூச்சுக்காற்றில் பாட்டுத் தந்தாள்
இளைப்பாற இடம் தந்தாள்..
இவள் என்னைக் குழந்தையாயும் தந்து
தந்தவர்கள் பட்டியலில்..தாய்க்குப்
பின் தரமாய் நிற்கிறாள்!!


அத்தை

உபசரிப்பில் கூட
உபத்திரபவம் தரக்கூடாதென்று
நினைத்து..மெதுவாக
பேசும் இன்னொரு அம்மா!..


சித்தி

தொலைதூரத்தில்
வாழ்ந்து..சுகம்
விசாரித்துக்கொண்டிருந்தாலு
நல்லது கெட்டதிற்கு
ஓடோடி வருவாள்
பக்கத்துவீட்டுக்காரி போல்!!


பாட்டி

திட்டித்திட்டி தீர்த்தாலும்
தேவைக்கு பாக்குப் பெட்டி
திறந்து பணம் தரும்..
வயதான தனலட்சுமி..


மகள்

பிறந்ததும்
பிஞ்சுப்பாதங்களால்
முகத்தில் மிதித்தாள்
இதத்தில் செத்தேன்..
வளர்கையில்
பிஞ்சு விரல்களால்
கன்னம் கிழித்தாள்
சுகத்தில் செத்தேன்..
பருவத்தில் காதல் மோகத்தில்
இதயத்தில் மிதித்தாள்..
நிஜமாய் செத்தேன்!!


மருமகள்

காலைக்கட்டிக்கொள்ளவும்
தோளில்தொற்றிக்கொள்ளவும்
அக்காபெற்ற அழகிய பொம்மை!!


பேத்தி

என்மூக்குக்
கண்ணாடியில் மோகம்
கொண்டவள்..கிழ
முதுகேறி சவாரி
செய்யும் சந்ததி
முத்திரை!...

நன்றி : முகம் தெரியா நண்பனுக்கு....

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

புதியதோர் உலகம் செய்வோம்.


உழைக்கும் கரங்களே உங்களின் கரங்களை நம்பியே இந்த உலகம்
[உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு... மே 01]


புதியதோர் உலகம் செய்வோம் - அதனைப்
புரிந்துணர்வுடன் பகிர்ந்து கொள்வோம்
புத்துணர்ச்சியுடன் வாழ்ந்தே இவ்வுலகைப்
புனித பூமி ஆக்கிடுவோம்

சாதி சமயங்களும் வேண்டாம் - தினமும்
சண்டை சச்சரவும் வேண்டாம்
சாதியை ஒன்றாய் ஆக்கி - நல்ல
சாதனையொன்று நாம் சமைப்போம்.

முதலாளி தொழிலாளி என்ற
முதலை தனையே ஒழித்திடுவோம்.
மமதை அற்று மானிடராய் வாழ
மாற்று வழியை நாமென்றும் நாடிடுவோம்.

இன மத மொழி வேறுபாட்டை
இன்றே நாம் களைவோம்.
ஏழை எளிய மக்களிடம்
இறக்கம் நாம் காட்டிடுவோம்.

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை நாம் கொளுத்திடுவோம்.
மானமுள்ள மனிதராய் வாழ
என்றும் நாமே முயன்றிடுவோம்.

பாட்டாளி வர்க்கம் உயர்ந்திடவே
பாட்டுக்கள் நாமும் புனைந்திடுவோம்.
உழைக்கும் மக்கள் உயர்ந்திடவே
ஊன்றுகோலாய் நாம் இருந்திடுவோம்.

வியாழன், 8 ஏப்ரல், 2010

நிரந்தர சமாதானம் வேண்டும்!


ஏசியில் வாழ்கின்ற
வாழ்க்கையது வேண்டாம்.
ஓசியில் கிடைக்கின்ற
நிவாரணமும் வேண்டாம்.

இடைஞ்சல்கள் ஏற்படுத்துகின்ற
இனவெறியும் வேண்டாம்.
மனங்களை மழுங்கடிக்கின்ற
மதவெறியும் வேண்டாம்.

மனிதனை விலங்காக அலைய விடும்
பணமும் வேண்டாம்.
பாடாய்ப் படுத்தும்
பதவிகளும் வேண்டாம்.

உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும்
போலி உறவுகளும் வேண்டாம்.
உறவுகளைப் பிரிக்கும் இந்தக்
காதலும் வேண்டாம்.

அல்லல் பட்டு வாழும்
அகதி வாழ்க்கையும் வேண்டாம்.
அழிவினை ஏற்படுத்துகின்ற
யுத்தமும் வேண்டாம்.

எம் தாய் நாட்டில்
நிம்மதியாய் நாம் வாழ
நிரந்தர சமாதானம் மட்டும்
வேண்டும்.... வேண்டும்....

வியாழன், 25 மார்ச், 2010

விலக்கி விடு போதையை...


மது தரும் மயக்கமெல்லாம்
விதி செய்யும் வேலையென்று
சதி செய்யும் உன் வாழ்க்கை
சாவிற்கே கொண்டு செல்லும்
கதியென்று மதுவை நினைத்திராதே
காவும் நோய்க்கு ஆளாகாதே
கனவுக்கான உன் போதை
கலக்கத்தை உண்டு பண்ணும்
போதை தன்னில் நீ மீண்டால்
பூமி தன்னில் நீ உயர்வாய்!

பல காலமாய் நீ சேர்த்த
பல நூறு நன்மைகள் தானும்
சில நாழிகைக்குள்
சிதைவுறாமலிருக்க
சிந்தித்து நீ பார்த்தால்
சிதையாது உன் வாழ்க்கை!
அலைமோதும் மனம் தன்னில்
விலையாக ஏன் போதை....?
எதிர்பார்ப்புக்கள் நிறைந்த
உன் வாழ்வு
எரிந்து போக விடலாமோ?

விரும்பாதே போதையை
வெறுப்பாகிப் போகும்
உன் வாழ்வு
கரும்பாக உன் மனத்தைக்
கட்டி நீ வைத்திருந்தால்
காலமெல்லாம்
இவ் உலகம் உன் காலடியில்!

சூரியனாய் நீயிருந்தால்
சுற்றி வரும் பல கோள்கள்
சுழன்று போகாமல் உன் மனதை
விலங்கிட்டுக் காத்திருப்பாய்
விலகும் உன் துயரெல்லாம்
துலங்கும் உன் பெயர் கூட...!

அல்லல்ப்படும் வாழ்க்கைக்குப்
போதை அது வழியல்ல!
புரிந்து கொள் உன் வாழ்வை
தெரிந்து விடும் உன் பாதை!
விரும்பி அதை வெறுத்துவிடு
விளையும் வெளிச்சம்
உன் வாழ்வில்!

வெள்ளி, 19 மார்ச், 2010

விழிப்பு


இருட்டுக்குள்ளே
இமைத்துக் கொண்டிருந்த
என் கண்களுக்கு
விழிப்பு வந்தது - மெதுவாக
விழித்துப் பார்க்கிறேன்.
மனிதன் நவ நாகரீகத்தில்
மோகம் கொண்டு - அதன்
போர்வைக்குள் அகப்பட்டு
உணர்வூட்டுவாரின்றித்
தினம் தினம் சீரழிகின்றான்!

சந்தியிலே நிற்கின்ற
இளைஞர்களினால்
வேலைச்சுமை தாங்க முடியாது
வெந்து கொள்ளும் அம்மாமார்...
தினமும் நெற்றி வியர்வை
சிந்தச் சிந்த
குடும்பத்துக்காய் உழைத்து
ஓடாய் இளைத்து
வீட்டுச் செலவுக்கே
காசில்லாது சினம் கொள்ளும்
அப்பாமார்...

பக்கத்து வீட்டுக் குடிகார
அப்பனின் குடியால்
அவன் குடும்பம் அன்றாடம்
அவதியுற்று நடுத்தெருவில்
நிற்கும் நிலை
அச்சச்சோ! அவன் வாயால்
சகிக்க முடியாத
உச்சரிப்புக்கள்.

சீதனக் கொடுமையால்
ஆசைகளை வீட்டிலே
பூட்டி வைத்து
அழகு பார்க்கும் பெற்றவர்கள்.
பெற்றெம்மையெல்லாம்
பேணி வளர்த்தாளாக்கிய
அம்மா, அப்பா
யாருமற்ற அனாதைகளாய்த்
தஞ்சம் புகும் முதியோர் இல்லம்.

ஐயோ இதென்ன கொடுமை!
என்னால் இவற்றைப்
பார்க்கவே முடியவில்லை
மீண்டும் கண்களை நான்
இறுக மூடிக் கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

பெண் விடுதலைக்காய்........


மார்ச் 08 பெண்கள் தினத்தை முன்னிட்டு.........

கல்விக் கண் திறக்கச் செய்வோம்
கசடுகளை ஓயச் செய்வோம்
முகில்களைக் கிழிக்கச் செய்வோம்
முறம் கொண்டு எழுந்து நிற்போம்

விண்வெளியில் களமமைப்போம்
மண்ணுலகைப் பொன்னுலகாக்குவோம்
பூவையரின் விழி நீரைப்
புயலாக மாறச் செய்வோம்

பொங்கியெழுந்தே புதியதோர்
சரித்திரம் படைப்போம்
கொழுந்து பறிக்கும் கைகளைக்
ஏட்டைப் பிடிக்கச் செய்வோம்

பானை பிடிக்கும் கைகளால்
பாரை வாழ வைப்போம்
நெஞ்சத் துணிவு கொண்டு
நீதிக்காய்த் தினம் உழைப்போம்

தொட்டிலாட்டும் கைகளால்
நாட்டைக் கட்டியாளச் செய்வோம்
வெட்டிப் பிளந்தாலும்- பெண்
விடுதலைக்காய் போராடுவோம்.

சனி, 13 பிப்ரவரி, 2010

காதலின் உயர்வு


பார்த்தவுடன் வருவது தான் காதல்
பழகியபோது ஒருவரையொருவர்
புரிந்துகொள்வது தான் காதல்
பள்ளிக் காலங்களிலே
இடையிடையே வந்து போகும்
பசுமையான நினைவுகளே
இந்தக் காதல்.

துள்ளித் திரியும் வேளை தன்னில்
சுமைகளையும் சுகங்களையும்
சொல்லித்தரும் சுதந்திர கீதமே காதல்.
பணத்தால் வருவதல்ல
உண்மைக்காதல்
பண்பு, பாசம், நேசம்
சுரக்கும் இன்ப
ஊற்றே காதல்.

கரும்பு போல இனிப்பதே காதல்
கனவுகள் காணும்
விந்தை உலகமே காதல்.
உள்ளமிரண்டும் இணைவதே காதல்
உயிருக்குள் உயிராகும்
உன்னதக் காவியமே
இந்தக் காதல்.

கண்களின் சந்திப்பினால்
கட்டுண்டுறச் செய்த காதல்
கற்பனைகள் ஆயிரம் காண
களமமைத்துத் தந்த
கருவூலமே காதல்!
பருவ இராகங்கள்
பல பாடிடும் காதல்
பாலைவனத்தையும்
பசுமையாக மாற்றும்
அற்புதச் சக்தியே காதல்.

காமம் கொண்டு பழகுவதல்ல காதல்
கனிவாக ஈருயிரும் கலந்துலாவும்
தேசியகீதமே காதல்.
இரு உள்ளங்களின்
மொழியே காதல்.
வாலிபத்தின்
வைர நினைவுகளே காதல்.
வற்றாத இன்ப ஊற்றே காதல்.

ஏமாற்றுவதற்கல்ல காதல்
ஏணியாய்த் தினம்
துணையிருப்பதே காதல்
சொன்னால் இனிமை காதல்
சுகமாய்ச் சிரிப்பதே காதல்
கரும்பு போல இனிப்பது
தான் காதல்
கவி புனைய எமக்குக்
கற்றுத்தந்த ஆசானே காதல்
இளமைக் காலத்தின்
அழியாப் பக்கமான காதலே
என்றும் வருவாய்
எம் துணையாக.....

சனி, 2 ஜனவரி, 2010

தமிழ்மொழி எம் தாய்மொழி


தமிழ்மொழி எங்கள் தாய்மொழி
தமிழ்மொழி ஒரு தனிமொழி
தமிழ்மொழி ஒர் அழகிய மொழி
தமிழ்மொழி எம் முதன் மொழி
தமிழ்மொழி ஒரு செம்மொழி
தமிழ்மொழி ஒர் இனிய மொழி
தமிழர் தொன்மைக்குச் சான்றான மொழி
தரணி போற்றிடும் தமிழ் மொழி.

இசையிலே இன்பம் கண்ட மொழி
எண் நுட்பங்கள் பல காணும் மொழி
ஓவியங்கள் பல காணும் மொழி
காவியங்கள் இயற்றும் மொழி
இயற்கை அன்னை அருளிய மொழி
இலக்கணங்கள் பல யார்த்த மொழி
இனிதான கலைகளை வளர்த்த மொழி
என்றுமே குறைவில்லாத சிறப்பு மொழி.

நினைத்தால் நெஞ்சினிக்கும் மொழி
சுவைத்தால் நாவினிக்கும் மொழி
கேட்டால் காதுவக்கும் மொழி
கேட்பவரைக் கொள்ளை கொள்ளும் மொழி
நல்ல சுகந்தரும் இதமான மொழி
தேனை நிகர்த்தினிக்கும் மொழி - எங்கள்
அமிழ்தினும் இனிதான தமிழ் மொழி.

உண்மை மிக்க நக்கீரனார் - நல்ல
உரை வகுத்த தமிழ் மொழி
ஊக்கமுள்ள வீரர் தம்மை
உருவாக்குகின்ற தமிழ் மொழி
வண்மை மிக்க பாண்டியன்
வளர்த்தெடுத்த செந்தமிழ் மொழி
பாராண்ட மைந்தர் நாம் - என்றென்றும்
விழா எடுக்கும் தமிழ் மொழி.

பொதிகை மலையிலே தோன்றிய மொழி
தென்னன் புகழிலே கிடந்த மொழி
சங்கப்பலகையில் இருந்த மொழி
வைகை ஏட்டிலே தவழ்ந்த மொழி
முச்சங்கம் கண்ட மொழி
மும்மன்னர் மடியிலே தவழ்ந்த மொழி
பேதை நெருப்பிலே நின்ற மொழி
கற்றோர் நினைவிலே நின்ற மொழி.

கம்பன் கவிபாடிய மொழி
சயங்கொண்டான் பரணி பாடிய மொழி
புகழேந்தி வெண்பா பாடிய மொழி
காடவன் கலம்பகம் பாடிய மொழி
ஓங்காப் புகழ் தொல்காப்பியன் இலக்கணம் யார்த்த மொழி
ஒளவையார் ஆத்திசூடி பாடிய மொழி
வள்ளுவன் குறளை வாய்மை பெற வைத்தமொழி
வாழ்க்கைக்கு நல்ல வளஞ்சேர்க்கும் மொழி.

தன் காலுக்கு சிலப்பதிகாரத்தை உடைய மொழி
தன் கைக்கு வளையாபதியை அணிந்த மொழி
தன் இடைக்கு மணிமேகலையை பூண்ட மொழி
தன் செவிக்கு குண்டலகேசியை பொருத்திய மொழி
உயிர் மெய் ஆய்தமுடன் இயங்கும் மொழி
குறிலும் நெடிலும் இசைந்தாடும் மொழி
வல்லினம் மெல்லினம் கொண்ட வனப்பு மொழி
வாழ்வை வளமாக்கிடும் எம் தாய் மொழி

அறிவியலுக்கும் அறைகூவல் விடுக்கும் ஆற்றல் மிக்க மொழி
மொழியியலுக்குச் சவால் விடுக்கும் திறன் மிக்க மொழி
வேற்றுமொழிகளுக்கும் சொற்கொடை அளித்த மொழி
பலகிளை மொழிகளுக்கு தாய் மொழி
இறைவன் தனித்திருந்து வளர்த்த மொழி
என்றும் அழியா தெய்வீகம் படைத்த மொழி
சொல் ஏர் உழவரின் நாவில் களிநடம் புரியும் மொழி
கால ஊழிக்கும் இயற்கையின் சீற்றத்துக்கும்
ஈடு கொடுத்து வாழும் மொழி.

சொல்வளம் பொருள்வளம் நிறைந்த மொழி
இயலும் இசையும் இனிய கூத்தும் உடைய மொழி
இளமையும் இனிமையும் இணைந்த தேன் மொழி
இலக்கணத்துக்கு தொல்காப்பியத்தைக் கொண்ட மொழி
அறநெறிக்குத் திருக்குறளைத் தந்த மொழி
முதற் குடிமக்கள் காப்பியத்தைப் படைத்த மொழி
நெற்றிக் கண்ணனுக்கும் குற்றம் வரைந்த மொழி
நீடூழி காலங்கள் தமிழ்ப்பணி செய்ய வைத்த மொழி
தமிழே நீ என்றென்றும் வாழ்க வளர்கவே.

வியாழன், 24 டிசம்பர், 2009

வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!


அழியாத அன்பொன்றே நட்பு
அன்பான புரிதல் தானே நட்பு
களங்கமில்லாத அன்பே நட்பு- அதைக்
காதலித்தால் வாழ்வே பொற்பு.

காலமெல்லாம் எமை இணைக்கும் நட்பு
கைகோர்த்துக் கடைந்தேறும் நட்பு
மனச்சுமையை இறக்கி வைக்கும் நட்பு
மாசில்லா உந்தன் நெஞ்சு தான் என் தெம்பு.

உள்ளத்து உணர்வொன்றே நட்பு
உயிரெல்லாம் கலந்ததுவே உன் நட்பு
வெள்ளம் போல் வரும் வேதனையை
விடியலாக்கித் தருமந்த நட்பு.

விளைகின்ற பயிராக வளர்கின்றதே உன் நட்பு
வாசமுள்ள பூவெல்லாம் பேசுமுந்தன் நட்பு
வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!

வெள்ளி, 30 அக்டோபர், 2009

சுதந்திரம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்- நாம்
அடிமையாக வாழ்ந்து விட்டோம்?
இன்னும் எத்தனை ஆண்டுகள்- நாம்
இருட்டில் வாழப் போகின்றோம்?
உயிரைக் காத்து என்ன பயன்?- நாம்
உலகில் வாழ்ந்து மடிவதனால்
எரியும் சாம்பல் தான் மிஞ்சும்- நாம்
ஏற்றம் காண்பதெப்போது?

அடிமையாக வாழ்வதை விட - நாம்
ஆயிரம் படிகள் தாண்டிடுவோம்!
இறைவன் என்பவன் இருக்கும் வரை - நாம்
இன்பம் என்றும் எய்திடுவோம்.
உலகில் காணும் கலைகளை- நாம்
ஊக்கத்தோடு கற்றிடுவோம்.
எளிமை கண்டு இரங்கிடுவோம்- நாம்
ஏற்றம் என்றும் அடைந்திடுவோம்.

அமைதி கொண்டே என்றும்- நாம்
அடிமைப் பேயை ஓட்டிடுவோம்!
இளமை இருக்கும் போதே- நாம்
இழிவு நிலையை நீக்கிடுவோம்.
உணர்ச்சி கொண்டு பொங்கியே- நாம்
உழைப்பை நன்கு வளர்த்திடுவோம்.
ஏழை எளியவர்க்கெல்லாம்- நாம்
எழுதிக் கற்றுக் கொடுத்திடுவோம்.

அகிலம் என்ற அவனியிலே- நாம்
அடிமைத் தீயைப் போக்கிடுவோம்.
இழைக்கும் துயர்கள் யாவற்றையும்- நாம்
இன்பத்தோடு போக்கிடுவோம்.
உழைக்கும் கரங்கள் அவற்றை- நாம்
ஊழி வரை காத்திடுவோம்
எழுதும் கரங்கள் அவற்றை- நாம்
ஏற்றதிற்குக் கொண்டு செல்வோம்.

“சுதந்திரம் ! சுதந்திரம் !” என்றே- நாம்
சுதாகரித்து எழுந்திடுவோம்.
சுற்றமுஞ் சூழலும் இன்புறவே- நாம்
சுகமும் வாழ்வும் கண்டிடுவோம்.
சரித்திரம் ஒன்று படைத்திடுவோம்- நாம்
சாதி வேற்றுமையை ஓழித்திடுவோம்.
சுதந்திர நாட்டை உருவாக்கவே- நாம்
“சுதந்திரம்” என்ற குரல் எழுப்பிடுவோம்!