படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஞானம்...!!


ஞானம் பெற்றது
நீ
உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்...
நான்
என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்...

-காசி ஆனந்தன்-

வியாழன், 22 மார்ச், 2012

செல்லாத நோட்டு!


சின்னப் பிள்ளைகள்
ஓட்டி விளையாடும்
கயிற்றுப் பேரூந்தில்
விளையாட்டாக
நானும் ஏறிக் கொண்டேன்...

கட்டணமாக
அவர்கள் கேட்ட
புளியங்கொட்டையோ
சோடா மூடியோ
இல்லாததால்...

நான் கொடுத்த
நூறு ரூபாய் நோட்டை
வாங்க மறுத்து
என்னை இறக்கி விட்டு
ஓட்டுனருக்கு
ரே... ரே... சொன்னார்
நடத்துனர்...

வேகமெடுத்தது பேரூந்து
பூம்.. பூம்... பூம்...

-அ. நிலாதரன்-

சனி, 24 டிசம்பர், 2011

முதலிலிருந்து மீண்டும்...!!


முதலில்
உனது பெயரைத் துடைத்தழி,
உனது வருடங்களைக் கட்டவிழ்த்துவிடு
உனது சுற்றுப்புறங்களை அழித்துவிடு,
நீ எதைப் போலிருக்கிறாயோ அதையும்,
எஞ்சியிருப்பதையும் வேரோடு பிடுங்கு,

பிறகு,
உனது பெயரைத் திரும்ப எழுது,
உனது வயதை மீட்டுப் பெறு,
உனது வீட்டை மறுபடி கட்டு,
உனது பாதையில் நட,

அதன் பிறகு
முடிவற்று,
தொடங்கு, முதலிலிருந்து மீண்டும்...!!

- எகிப்து ஆண்ட்ரி செடிட் -

புதன், 30 நவம்பர், 2011

மறுபடியும் நனைந்தேன் ...!!



மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
"குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே"
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே"
என்றாள் அக்கா

"சளி பிடிச்சிகிட்டு
செலவு வைக்கப்போற பாரு"
என்றார் அப்பா..

தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!!!

(படிச்சதில பிடிச்ச கவிதை ஒன்று....)

வியாழன், 20 அக்டோபர், 2011

ஆணின் பார்வையில் பெண்...!


உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்..

-சுதேசன்-

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சிசுக்கள் வேகும் அடுப்பு!


செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புக்கள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முட்கம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தை தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தை சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும் அவளை புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புள் கொடிகளை அறுத்து
பன்னிக்குடங்களை உடைத்தாள்
இரத்தம் பெருக்கெடுக்க
அவள் இரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்.

நன்றி - தீபச்செல்வன்

புதன், 16 மார்ச், 2011

பிரிவு என்னைப் பொறுத்தவரை பொய்..!


யார் எங்கு போனார்கள்
எதற்கு எதுவுமே புரியவில்லை
என்றென்றைக்குமான அகதியாய்
ஓர் மூலையில் ஒதுங்கி

எதை இழந்தேன்
எதைப் பெறத் தோற்றேன்
வெற்றுக் கரத்துடன் வீதியில் இறங்கினேன்
வேதனையில் யாரோ விம்முகிறார்கள்
எங்கோ தூக்கமற்று இரவிரவாய் அழுந்தி
எங்கோவோர் இதயம் வேதனையில் துடிக்கிறது
வேண்டாம்!

அவலம் தரும் பிரிவு வேண்டாம்
பாழ்பட்ட பிரிவினைப்
பழிப்பேன் நான்
வலம் வந்த
இரக்கமற்ற நினைவுகளைப்
பழிப்பேன் நான்

தூக்கமற்று புரள்வதற்காய்
இரவுகள் வருகின்றன
பித்துப் பிடித்தலைவதற்காய்
பகல்கள் காத்திருக்கின்றன

விதியைப்பற்றி எச்சலனமும் இன்றில்லை
வேகமாக அதிர்ந்ததிர்ந்து
ஓயும் கணங்கள் இனியில்லை
இனி எவரும் வரப்போவதில்லை

இனி மனிதர்களைத் தேடி அலைய வேண்டும்
பாழ்வெளியில்
பறவைகளைப் பார்த்து ஏங்கி
குறுகுறுத்து ஓய வேண்டும்

- அஸ்வகோஷ் -

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

எனக்குள் பெய்யும் மழை...


என்னிடம்
ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க
வார்த்தைகள் இல்லை

இரவு
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்

இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும்போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உட்காரக் கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனது
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்
எனக்கு
பகலாய் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது

-சிவரமணி-

புதன், 29 செப்டம்பர், 2010

என்னதான் 'தவறு'..?


எங்களை யாரும் பொருட்படுத்தவில்லை.
இயந்திரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்க்கையைக்
காட்டிலும் எமது உயிர்கள் குறைவான மதிப்பை
உடையனவாகவே இருந்தன.
நாங்கள் கற்களைப் போல,
சாலையோரத்துக் களைச்செடிகள் போல இருந்தோம்.

எங்கள் குரல்கள் அடக்கப்பட்டன.
நாங்கள் முகமற்றவர்களாக இருந்தோம்.
நாங்கள் பெயரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுக்கு எதிர்காலமே இருக்கவில்லை.
நாங்கள் உயிர்வாழவே இல்லை.

எங்களுக்கு ஒரு குரல் வேண்டுமென்றால்
நாங்கள் ஆயுதங்களை ஏந்தவேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு முகம் வேண்டுமென்றால்
எங்கள் முகங்களை மறைத்துக்கொள்ள வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஒரு பெயர் வேண்டுமென்றால்
எங்கள் பெயர்களை மறந்துவிட வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.
எங்களுக்கு ஓர் எதிர்காலம் வேண்டுமென்றால்
எங்கள் கடந்த காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று
எங்களிடம் சொன்னது மலை.

எனவேதான் நாங்கள் போராளிகளானோம்.
எமது மக்கள் சாவதை
எமது மக்கள் ஏமாற்றப்படுவதை
இனியும் நாங்கள்விரும்பவில்லை,
நாங்கள் மறக்கப்படுவதை
இனியும் நாங்கள் விரும்பவில்லை.

எங்கள் கறுப்பு முகமூடிக்குப் பின்னால்
எங்கள் ஆயுதமேந்திய குரலுக்குப் பின்னால்
பெயர்சொல்லி அழைக்க முடியாத
எங்கள் பெயருக்குப் பின்னால்
நீங்கள் காண்கின்ற எங்களுக்குப் பின்னால்
நாங்கள் உண்மையில் நீங்களேதான்.

(நன்றி: எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்)

[இழந்துவிட்ட உரிமைகளை, மறுக்கப்பட்ட சுதந்திரங்களை மீட்பதற்கு உயிரையும் ஆயுதமாக்கிப் போனவர்களின் நினைவாக...]

புதன், 14 ஜூலை, 2010

யுத்தத்தின் குரல்


பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானது.
நீல வானம் கறுப்பானது.
எம் பச்சை வயலும் தரையும் சிவப்பானது.
எம் கண்ணீர்பட்டு தண்ணீர் கூட இரத்தமானது.
ஐயோ ஐயோ இது கனவல்ல.

போகும் வழியெல்லாம் இரத்த வாடையுடன் பிரேதங்கள்
இல்லை இல்லை இவர்கள் பிரேதங்களே இல்லை
என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என் அண்ணா, என் நண்பர்கள்.
மனிதர்களை மனிதர்களே அழித்துவிட்டார்கள் . . .

அருகில் இருந்து கட்டியணைக்க ஆசை
கண்ணீர் வற்றும் வரை கதறியழ ஆசை
என்னைச்சுற்றி பல துப்பாக்கி முனைகள்:
பயங்கர ஆண்களால், என் சகோதரியின் உடல்
பலாத்காரப்படுத்தப்பட்டு, பயத்துடன் விறைத்துக் கிடக்கிறது
இரத்தக் கறைகளுடன், கால் இழந்து கையிழந்து தரையில் துவண்டு
அலறும் என் சகோதரர்களின் குரல் அதிகரிக்கின்றது
இறந்த பெற்றாரை எழுப்ப தரையில் கதறும் எம் குழந்தைகளை,
மிதித்து செல்கின்றன, வழி தெரியாப் பாதங்கள் . . .
பயங்கர செல் துண்டுகளிடம் இருந்து – இரு உயிர்களை காப்பாற்ற,
ஓடிய கர்ப்பிணி தாயின் இரண்டு கால்களும், சிதைக்கப்பட்டு தரையில் துடிக்கின்றன
செல் துண்டுகள் என்னையும் சிதைக்க ஓடி வருகின்றன.
நானும் பிணமாகமாட்டேன்.
அந்த பயங்கரமான ஆண்களால் பலாத்காரப் படுத்தப்பட மாட்டேன்
என்னை சுற்றி ஆறாக ஓடும் என் பிள்ளைகளின் இரத்த கண்ணீரையும்,
சிதைந்து கிடக்கும் என் சகோதரனின் உடலையும் தொடர்ந்தும் பார்க்கமாட்டேன்
(எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.)

ஓடினேன் ஓடினேன் முடியவில்லை
உறங்க வீடும் இல்லை.
உயிர் வாழ உணவும் இல்லை.
இரத்த வாடை கொண்ட சிவப்பு ஆடையை மாற்ற துணியும் இல்லை.
காயங்களுக்கு மருந்தும் இல்லை
கட்டியணைக்க கரங்கள் இல்லை
அன்பான வார்த்தைகள் கூற யாரும் இல்லை
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின.

பயங்கர கொடுமைக்காரர்கள் எமது கர்ப்பப்பையை சிதைத்தார்கள்
தோழர்களின் கோபங்களால்
எம் காயங்களின் மேல் துப்பாக்கியை நடக்க செய்தார்கள்.
சமாதானம், மனித உரிமை பேசும் எம் நண்பர்கள் கூட
மக்கள் குரல் கேட்காது போனார்கள்.
அயல் நாட்டு நண்பர்கள், இறந்து கிடக்கும்
எம் குழந்தைகளின் உடல் மேல் போர் ஒப்பந்தம் பேசிக் கொண்டார்கள்
பலம் வாய்ந்த தலைவர்கள் தம் பதவி வெறிக்கு
வறுமையில் வாழும் முகம் தெரியா
எம் காக்கி சட்டை சகோதரனை இரையாக்கி கொண்டார்கள்.
உலகநாட்டு பிரதிநிதிகள், பலம் வாய்ந்த ஆண்களை காப்பாற்றுவதிலும்,
பயங்கரவாத சட்டத்தை நிலை நாட்டுவதிலும் அக்கறை கொண்டார்கள்.

எம் நிலைகண்டு: அனைத்தும் கற்பனை என்றார்கள் – என் நண்பர்கள்
சுதந்திரத்தின் இறுதிக் கட்டம் என்றார்கள் – எம் நாட்டின் காவலர்கள்
எம் இரத்தம், எந்தப் பகுதியை சார்ந்தது என்ற பரிசோதனைக்கு தயாரானார்கள் – என் தோழர்கள்
பயங்கரவாதம் என்றார்கள்; – பிற நாட்டு நண்பர்கள்.
எமது காயங்களும் சிதைந்த உடல்களும் தெரியா விம்பங்களாயின

பல வழிகளில் என் குரலை உயர்த்தி கூறினேன்:
இல்லை: இவை கனவுகளும் கற்பனைகளும் அல்ல
இல்லை: சுதந்திரமும் அல்ல:
இல்லை: பரிசோதனையும் அல்ல
இல்லை: பயங்கரவாதமும் அல்ல
இவை:
எம் இரத்தக் கண்ணீர்.
இரத்த ஆறுகள்
இரணத்துடன் கிழிந்துகிடக்கும் காயங்கள்.
வலியுடன் இணைந்த குமுறல்கள்
அமைதியை தேடும் விலையற்ற உயிர்கள்.

30 ஆண்டுகளாக – எம் உடல்
துப்பாக்கிகளாலும், செல் துண்டுகளாலும் துளைக்கப் பட்டு
சிதைக்கப்பட்டு வீதியில் கிடப்பது – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?
நின்மதி தேடி, சமாதானம் தேடி,
ஓடும் எம் பாதங்கள் – எப்படி உன் கண்களுக்கு தெரியாது போனது?;
எம் குழந்தைகளின் பிரேதங்களை – உன் கண்கள் எப்படிக் காண மறுத்தது?
எம் கர்ப்பப்பையை- உன்னால் ஏப்படி சிதைக்க முடிந்தது?
துப்பாக்கியும் செல்த்துண்டுகளும் பயங்கரமான பாதங்களும்
எம் முகத்தை அழித்துவிட்டது.
எம் குரலை புதைத்து விட்டது

எமது குழந்தைகளின் பிணங்களின் மேல் – நடத்தும் போர்ப் பேச்சு வார்த்தையை நிறுத்து
பயங்கர துப்பாக்கி முனைகளுக்கும், கொடூர கொலைகளுக்கும் துணைபோவதை நிறுத்து
எம்மை, எம் குழந்தைகளின் எதிர்காலத்தை,
அழிக்கும் உன் அநியாய செயல்களை நிறுத்து
வன்முறையை நிறுத்து
இரத்தம் காண்பதை நிறுத்து
பசிக் கொடுமையை நிறுத்து
எம் காயங்களை பார்க்க மறுப்பதை நிறுத்து
யுத்தத்தை நிறுத்து
பயங்கரமான உன் பாதங்களாலும் துப்பாக்கிகளாலும்
எம் குரல் புதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட போதிலும்

உங்கள் பாதங்கள் எம் காயத்தின் கசிவை உணரும்வரை
உங்கள் செவிகளில் எம் குரல் கேட்கும் வரை
உரத்து கத்துவோம் “யுத்தம் வேண்டாம்”

-றெஜினி டேவிட்-

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இதே இரவில்....


நீண்ட மழை ஓய்வின் பின்னால்

இலைகளிலி்ருந்து சொட்டுகிற

துளியின் ஓசைகளை

என்னைப் போலவே சிலர்

இந்த ஜாமத்திலும்

கேட்டுக் கொண்டிருக்கக்கூடும்...

இதே இரவில்...


குடும்பமே படுத்துறங்குகிற

அகதிக் கூடாரத்துள்

அருகிலேயே கிடக்கின்ற

அம்மாவும் பிள்ளைகளும்

உறங்கியிருக்கலா மென்கிற

ஐயப்பாட்டுடன்

தன் இளம் மனைவியின் முடியை

கோதிக் கொண்டிருக்கிற கணவன்

தாயின் செருமலைக் கேட்டு

கையை இழுத்துக்கொள்வான்

இதே இரவில்...

தூங்கும் போது எப்போதுமே

கணவன் மீது கால் கை போடுகிற

பழக்கமுள்ள மனைவி

அவ்ன் காணாமல் போய்

காலாண்டாகியும், அதே பழக்கத்தில்

காலையும் கையையும் தலையணைமேல்

வீசிக்கொண்டிருப்பாள்..!

அதே வீட்டில்

கதவு தட்டப்படுவது போல்

சத்தம் கேட்டு

கனவில் திடுக்கிட்டெழுந்த அவனது தாய்

ஒரு வேளை மகனாக இருக்கலாம்..?

என்கிற அப்பாவித்தனமான

நம்பிக்கையில்

ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்ப்பாள்

இதே இரவில்...


வெளவால் போல் தலைகீழாக

வதை முகாம்களில் தூக்கப்பட்டிருக்கும்

எம்முடைய பிள்ளைகள்

தாங்கொணா வதைகளில் தளர்ந்துபோய்

உலர்ந்து் போகிற ஓலங்களை

எழுப்பிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

இப்போதைய குடாநாட்டின்

இளைஞர்கள்

எதுவுமே நடந்துவிடவில்லை

என்பதுவாய்

மது விருந்தில் திளைத்தபடி

ஊர்ப் பெண்ணொருத்தியை

நடிகையுடன் ஒப்பிட்டு

பேசிக்கொண்டிருப்பார்கள்

இதே இரவில்...

அடர்ந்த காட்டிற்குள்

விழுப்புண்களோடும் வேதனைகளோடும்

தோழர்கள்

வேகமாக நழுவிக்கொண்டிப்பார்கள்

இதே இரவில்...

கடவுளாலேயே கை விடப்பட்டவனான

நான்

இத்தனை வருடகால

வி்லை கொடுப்பும்

ஒரு கனவினைப்போல்

இரவோடிரவாக

முடிந்து விட்டதென்பதனை

நம்ப முடியாமலும் தாங்க முடியாமலும்

அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும்

ஏதோ ஓர் வைராக்கியத்தில்

வேதனையைத் தீர்க்க

வெற்றுத்தாளில்

வரைந்து கொண்டிருக்கிறேன்

“சிதைகள் ஊன்றப் படுவதற்கான

காரணத்தையும்

விதைகள் முளைக்கப் போவதற்கான

காலத்தையும்”...


தி.திருக்குமரன்

ஞாயிறு, 7 மார்ச், 2010

பெண் கவிகள்


நான் படித்த கவிதைகளிலேயே என் நெஞ்சை உலுக்கிய வரிகள் இவை. இதை வாசகர்களாகிய உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

“.....அடுத்த ஆண்டும் வசந்தம்
ஆர்ப்பாட்டமாய் வரும்
அடுத்த ஆண்டும்
கொல்லையில்
தேன் சிட்டு முட்டையிடும்
முட்டையை நேசப்பார்வையில்
அடைகாக்க நானிருக்க மாட்டேன்.
அருவருத்தாலும்
நினைவில்
அசையாமல் நின்று போன அட்டையைக் கண்டலற
நானிருக்க மாட்டேன்.
வாழ்வின் மகிழ்ச்சியனைத்தையும்
மழை நாள் இரவில்
பேசித்தீர்க்க நானிருக்க மாட்டேன்...
அடுத்த ஆண்டும்
வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்
நான் மட்டும் மணமாகிப் போயிருப்பேன்....”
- வெண்ணிலா -

“....கண்ணகியைப் பேச
கண்ணகியே எழுந்திருந்தால்
மதுரைக்குப் போய்
மன்னன் முன் சிலம்பை உடைத்து
தெய்வமாகி இருக்கமாட்டாள்.
புகாரியிலேயே கோவலனின்
மண்டையை உடைத்து
மனுஷியாகி இருப்பாள்.
சீதையைப் பேச
சீதையே எழுந்திருந்தால்
அக்னிப் பரீட்சைக்கு
இராமனையும் இழுத்திருப்பாள்.
ஆம் பெண்ணே
உன்னைப் பேச நீயே எழு.....
- அறிவுமதி -

“....எனக்கு
முகம் இல்லை.... இதயம் இல்லை....
ஆத்மாவும் இல்லை....
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்.... நீண்ட கூந்தல்
சிறிய இடை..... பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல், படுக்கையை விரித்தல்,
குழந்தையைப் பெறுதல், பணிந்து நடத்தல்.
இவையே எனது கடமைகள் ஆகும்.....”
-சங்கரி -

“.... ஆறு மணிக்குள்
அவசரமாய் முடிக்க வேண்டும்.
பெண் விடுதலை பற்றிய என் பேச்சை
ஐந்து நிமிடம் தாமதமாய்ப் போனாலும்
அறை விழும் அவரிடம்.......”
- திலகவதி -

“.....பாவம் இந்த மனைவி
இல்லறக் கிரிக்கட்டில்
சமையலறைக்கும்
படுக்கையறைக்கும்
ரன்கள் எடுத்தே ரணமாய்ப் போனாள்.....”
- வைரமுத்து -

“.....கிளிகள் என்றும் ஆடும் மயில்கள் என்றும் நீங்கள்
கேட்ட வருணனை கொஞ்சங்களோ
இறக்கை வெட்டிய கிளிகளாய் - நீங்கள்
எத்தனை காலம் இக் கூண்டுக்குள்ளே......”
- இன்குலாப் -

“.....ஆரம்பமாயிற்று
என் மீதான விசாரணை
நடக்க வைத்துப் பார்த்ததில்
புன்னகை பூத்தனர் என்னைப் பிடித்திருப்பதாய்
நீண்டிருந்த பட்டங்களைக் கேட்டபடி
சிற்றுண்டித் தட்டுக்களும் தேநீர்க் கோப்பைகளும் காலியாயின
பற்றியிருக்கும் என் அரசுப் பணியை அறிந்ததும்
கைகளில் திணித்தனர் தாம்பூலத்தை
சம்பள விவரத்தைப் பட்டியலிட
குறித்தே விட்டனர் கல்யாணத் தேதியை
எதற்கும் இருக்கட்டுமென
கவிதை எழுதுவதை கடைசியில் சொல்லி வைத்தேன்.
வந்தவர்கள் எழுந்தனர்
வாயிலை நோக்கி...."
- சுகிர்தராணி -