கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....! தொடர்கிறது....


உலகத் தமிழனும் முழுஅளவில் தமிங்கிலத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கிறான்.

‘மம்மி’, ‘டாடி’, ‘அங்கிள்’, ஆண்டி’, என்று அவன் குழந்தைகள் பெற்றோரை உறவினர்களை அழைப்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி அவனுக்கு..

எப்போதாவது இலண்டனுக்குத் தன்னைப் பார்க்கத் தமிழீழத்தில் இருந்து உறவினர்கள் வரும் போது அவர்களிடம் ‘என் பிள்ளைக்கு தமிழ் கொஞ்சம் கூட பேச வராது’ என்று சொல்லிக் கொள்வதில் எல்லையில்லாப் பெருமை.

தன் பிள்ளைகளைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத வைத்துத் தன்னையே மறக்கிறான் தமிழன்.

தமிழன் வீழ்ச்சிக்கும் தமிழின் வீழ்ச்சிக்கும் தமிழனே வாசல் திறக்கிறான்.

இலங்கைத் தீவு முழுவதிலுமே 1956 ஆம் ஆண்டுதான் தனிச் சிங்களத்தை இன வெறிச்சிங்களவர்கள் ஆட்சிமொழியாக்கினார்கள்.

அதே 1956 இல் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த பேராயக்கட்சி தமிழை ஆட்சி மொழியாக்கியது.

சிங்களவனைப் பொறுத்தவரை அவன் தனது தாய் மொழியை ஆட்சி மொழியாக்கிச் சிங்களத்தை உயர்த்தி விட்டான்.

எங்கும் எதிலும் சிங்களம் என்றாகி விட்டது.

ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்றிச் சிங்களவனுக்கு 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. தமிழ் நாட்டானுக்கும் 54 ஆண்டுகள் தான் ஆகின்றன. சிங்களவன் மொழிப்பற்றையும் நம் மொழிப்பற்றையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழ் நாட்டில் செத்துக் கிடக்கிறது.

கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் ஒரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய ஆங்கிலம் ஆட்சிமொழி.
கி.மு 50 000 இல் தோன்றிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழனின் இன்னொரு தாய்நாட்டில் கி.பி 500 இல் தோன்றிய சிங்களம் ஆட்சி மொழி.

தலை குனிய வேண்டும் தமிழன்.

பிரான்ஸ் நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது பிரான்சு தெரிகிறது. ஜேர்மனிய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ஜேர்மனி தெரிகிறது. ரஷ்ய நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது ரஷ்யா தெரிகிறது. தமிழ்நாட்டின் கடைத்தெருவில் நடக்கும் போது மட்டும் இங்கிலாந்து அல்லவா தெரிகிறது.

உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும் தமிழன்.

இனியும் தமிழின் அருமை மறந்து வாழ்தல் தமிழர்க்கு இழிவு பயப்பதாகும்.

நயாகரா நீர்வீழ்ச்சியில் ‘நல்வரவு’ எனத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதாம். கேட்போரிடம் ‘உலகின் மூத்த மொழியான தமிழை உலகின் உயர்ந்த நீர்வீழ்ச்சியான நயாகராவில் எழுதி வைத்திருக்கிறோம்’ என்கிறார்களாம்.

யப்பானியப் பல்கலைக்கழக வாயில் முகப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்னும் சங்கத் தமிழ்ப் பாடல் வரியை மொழிபெயர்த்து யப்பானியர் எழுதி வைத்துள்ளனராம்.

ஜெருசேலம் நகரில் உள்ள ஒலிவ மலையில் கிறிஸ்த்தவக் கோயில் ஒன்றில் ஜேசு கற்பித்த வழிபாட்டுக் கருத்து உலகிலுள்ள அறுபத்தெட்டு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறதாம். அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளதாம்.

புத்தர் தமிழ் படித்தார். என்று மிகப்பழைய வடமொழி நூலான ‘இலலித விசுதாரம்’ தமிழைப் புகழ்ந்து பேசுகிறதாம்.

என் கல்லறையில் ‘ ஒரு தமிழ் படித்த மணவன்’ என எழுதி வையுங்கள். என்று மேனாட்டாரான தமிழறிஞர் போப் தனது மறைவுக்கு முன்பு நண்பர்களிடம் எடுத்துரைத்தாராம்.

‘திருக்குறளைப் படிக்க நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்’. என்க் காந்தியடிகள் திரும்பத் திரும்பக் கூறுவாராம்.

மற்றவர்களுக்கெல்லாம் தமிழின் அருமை பெருமை தெரிகிறது. உற்றவர்களுக்கு மறந்து போயிற்றே.

இன்னொன்று -

அடுத்தவர்களெல்லாம் தமிழைப் போற்றியிருக்கிறார்கள். என்பது ஒரு புறம் உண்மை தான் எனினும் அவர்களில் யாராவது தங்களைத் தமிழர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?

குமரிக் கண்டத்திலிருந்து உலகம் முழுவதும் பரவிய காலம் முதல் இற்றை வரை தமிழன் தான் போன போன இடங்களிலெல்லாம் ஆங்காங்குள்ள இனத்தவனாய் மாறிப் போனானே தவிர அடுத்தவன் தமிழனாய் மாறினான் என்ற குறிப்பு வரலாற்றில் எங்குமே இல்லை.

தமிழனால் தமிழ் அழிந்தது. என்பது நமது நேற்றாக இருந்தது.

தமிழனால் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது. என்பது நமது இன்றாக இருக்கிறது.

தமிழனால் தமிழ் மீட்கப்பட்டது. என்பது நமது நாளையாக இருக்கட்டும்.

- முற்றும்-

(காசி ஆனந்தனின் “ தமிழனா... திமிங்கிலனா? ” என்ற நூலில் இருந்து.....)

வெள்ளி, 22 ஜனவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....!


தமிழன் தன் தாய்மொழியைப் புகழ்ந்தான் - போற்றினான் - தலையில் வைத்துக் குதித்தான் - காப்பாற்றவில்லை.
சொந்த மொழி அழியப் போகிறதே என்னும் கவலை கொஞ்சமும் இன்றி வந்த
மொழிக்கெல்லாம் தமிழன் வாசல் திறந்தான்.

தமிழ் மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பது தெரிந்தும் தமிழன் பிற
மொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான்.

“வீட்டுக் கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும்
கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும்
கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ
ரிக்சாவில் தப்பி ஓடிய போது தகவல் அறிந்த பொலிஸ் ஏட்டு விரட்டி
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின”.

செய்தி ஏட்டில் ஒரு திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான்
என நினைக்கிறோம்.

ஆனால்........

தமிழா இது?

‘சாவி’ - போர்த்துக்கீசிய மொழி, ‘பீரோ’ - பிரெஞ்சு மொழி,
‘துட்டு’ - டச்சு மொழி, ‘கோணி’ - இந்தி மொழி, ‘பப்பாளி’ - மலாய் மொழி,
‘சப்போட்டா’ - யப்பானிய மொழி, ‘கொய்யா’ - பிரேசிலிய மொழி,
‘சுமார்’ - பெர்சிய மொழி, ‘வயது’ - சமஸ்கிருத மொழி,
‘கில்லாடி’ - மராத்தி மொழி, ‘ஆட்டோ’ - கிரேக்க மொழி,
‘ரிக்சா’ - யப்பானிய மொழி, ‘தகவல்’ - அரபி மொழி,
‘பொலிஸ்’ - இலத்தீன் மொழி, ‘ஏட்டு’ - ஆங்கில மொழி, ‘துப்பாக்கி’ -
துருக்கி மொழி, தோட்டா - உருது மொழி.

எந்த மொழியையும் தமிழன் எற்றுக் கொள்வான் என்பதற்கு இதை விடச்
சான்று தேவையில்லை.

இலங்கையிலும் தமிழன் மொழி இழந்து இனம் மாறிப் போனான் என்பதே வரலாறு. இலங்கை என்பது தூய தமிழ்ச்சொல். இலங்குதல் - ஒளி விடுதல்
என்பது தான் வேர்.

சிங்களவன் இன்று ‘லங்கா’ என இலங்கையை அழைக்கிறான். ‘லக்’ என்ற
வட மொழிச் சொல்லில் இருந்தே ‘லங்கா’ வந்தது என்கிறான் சிங்கள ஆய்வாளன்.

ஆனால்,

காலம் காலமாய்ச் சிங்களவர்களின் பெயர்களிலே ‘இலங்கை’ என்ற தூய தமிழ்ச் சொல் ஒட்டிக் கொண்டிருப்பதை எவருமே சுட்டிக் காட்டுவதில்லை.

இலங்கை ரத்னா, இலங்கை கோன் என்று சிங்களவர் பெயர்கள் உண்டே தவிர- லக்ரத்னா, லக்கோன் என்றோ சிங்களவர் பெயர்கள் உண்டா?

பைந்தமிழ் ஈழத்தில் - மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியமர்ந்த போர்த்துக்கீசர்க்ள் இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்த்துக்கீச மொழியிலேயே உரையாடுகிறார்கள்.

ஆனால்,

150 ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் தீவுக்குப் போன தமிழர்கள் தாய் மொழியாம் தமிழை முற்றிலுமாக மறந்து கிரியோல் மொழிக்காரர்களாய் ஆங்கில மொழிக்காரர்களாய் மாறிப் போனார்கள்.

காலையில் மகனைப் பார்த்து ‘பல்லை Brush பண்ணு’ என்கிறான். பின்பு ‘Body wash பண்ணு’ எங்கிறான். அப்புறம் ‘Tiffin பண்ணு’ என்கிறான். பிறகு ‘Dress பண்ணு’ என்கிறான். பின்பு ‘Ready பண்ணு’ என்கிறான். பின்பு பெரியவரை ‘Meet பண்ணு’ என்கிறான். பிறகு ‘அங்கேயே stay பண்ணிடாதப்பா - Return பண்ணிடு’ என்கிறான்.

இவர்கள் வாயில் பண்ணுதல் என்ற தமிழ்ச்சொல்லை விட்டால் தமிழ் இல்லை.

கடைத்தெருவில் இறங்கினால் ‘ லாண்டரி’, ‘ஏர் கட்டிங் சலூன்’, ‘ஓட்டல்’, ‘எலக்டிரிக்கல்ஸ்’, ‘டைலர்ஸ்’, ‘கம்பனி’, ‘டெக்ஸ்டைல்ஸ்’, இப்படி

நாளேடுகள் வார இதழ்கள் வாங்கப் போனால் ‘ஜுனியர் போஸ்ட்’, ‘இந்தியா ருடே’, ‘ரிப்போட்டர்’, ‘ஹெல்த்’ இப்படி

துணி வாங்கப் போனால் ‘பாண்ட்’, ‘சர்ட்’, ‘ஜீன்ஸ்’, ‘சாறி’, ‘ஜாக்கட்’ இப்படி

அலுவலகத்தில் நுழைந்தால் ‘டைரக்டர்’, ‘கிளார்க்’, ‘பியூன்’, ‘லாக்கர்’, ‘டிராயர்’, ‘பைல்’ ,

பள்ளிக்க்கூடம் போனால் ‘பிரின்சிபால்’, ‘டீச்சர்’, ‘ஸ்டூடன்ஸ்’, ‘கிளாஸ்’, ‘டெஸ்டு’, ‘றிசல்டு’, ‘பாஸ்’, ‘பெயில்’,

ஏதேனும் தொழில் பார்ப்போம் என்றால் ‘அப்பிளிக்கேசன்’, ‘இன்டர்வியூ’, ‘செலக்சன்’, ‘அப்பாயிண்ட்மெண்ட்’, ப்ரோமோசன்’,

விளையாடப் போனால் ‘கிரிக்கெட்’, ‘புட்பால்’, ‘டெனிஸ்’, ‘ஹாக்கி’, ‘செஸ்’,

நோய் வந்தால் ‘ஹாஸ்பிடல்’, ‘டாக்டர்’, ‘நர்ஸ்’, ‘சிஸ்டர்’, ‘ஆப்ரேசன்’ இப்படி

திரையுலகில் நுழைந்தால் ‘சூட்டிங்’, ‘அவுட்டோர்’, ‘இண்டோர்’, ‘கால்சீட்’, ‘மேக்கப்’, கட் கட் கட் இப்படி

முத்தமிழ் விழா மேடையில் கூட முதலில் முழங்குவது
‘மைக் டெஸ்டிங் ஒன் டூ திரீ!’

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருட வருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் ‘Beware of Dogs’ என்று ஆங்கிலத்தில் எழுதி வைக்கிறான் தமிழன்.

எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழியில் ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும்
‘Use Me’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் குப்பைத் தொட்டி கூட இன்று ஆங்கிலம் பேசும் தலைக்குனிவை யாரிடம் சொல்லி அழுவது.....?

இப்படி நாம் 85% க்கும் அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசும் மொழியை தமிழ் என்று அழைக்கலாமா? இது தமிழல்ல தமிங்கிலம். தமிழ்நாட்டில் எங்கும் தமிங்கிலம்........!

-தொடரும்....-

திங்கள், 9 நவம்பர், 2009

போர்க்காலச் சூழ்நிலையில் பாதிப்புற்றோருக்கு உதவுதல்



எமது இன்றைய போர்க்காலச் சூழ்நிலையில் சொந்த மண்ணிலேயே அனாதைகள் ஆக்கப்பட்டு உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, ஆதரிக்க உறவினர் இன்றி அல்லற் படுவோரே பாதிக்கப்பட்டவர்கள் என்ற பார்வைக்கு உட்படுகின்றனர். இவ்வண்ணம் கஷ்டப்படுவோருக்கு உதவுதல் எமது எல்லோருக்கும் உரிய தலையாய கடமையாகும். ஆனால் எமது மண்ணில் இருக்கும் பல மக்களுக்குத் தமது பொறுப்புக்கள் பற்றி உணர முடிவதில்லை. ஏதோ தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருந்து விடுகின்றனர். எமது உடன் பிறப்புக்களுக்கு நாம் உதவாவிட்டால் யார் உதவுவது?
பாதிப்புற்றோருக்கு உதவுவதற்காக இன்று நமது நாட்டில் பல அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வமைப்புக்களால் தனித்து நின்று பாதிப்புற்ற மக்களுக்கு உதவ முடியாது. ஆகவே எம் மண்ணின் மைந்தர்கள் தான் அவர்களின் தோளோடு தோள் நின்று உதவ முன் வர வேண்டும். துள்ளி விளையாடித் திரியும் இளம் நெஞ்சங்கள் பயிலும் பாடசாலைகளில் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமோ, பொது இடங்களில் கூட்டங்களை வைப்பதன் மூலமோ பாதிப்புற்றோரின் அவலங்களையும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகளையும் பற்றி பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாதிப்புற்றோருக்கு உதவும் வழிவகைகள் ஆவன :
அவர்களுக்கு உலர் உணவு வகைகளைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆணைப்பசிக்கு சோள்ப் பொரியேனும் நாம் கொடுக்கலாம். இருக்க உறையுள் இன்றி கஷ்டப்படுவோருக்கு குடில்கள், கொட்டகைகள் அமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியும். படிக்க மனம் இருந்தும் தமது கல்வியைத் தொடர முடியாமல் அல்லல்படும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் அறிவுப் பசியை ஓரளவிற்காவது தீர்க்க முடியும்.

பாதிக்கப்பட்டவர்களினுடைய துன்பங்களில் பங்கெடுப்பதன் மூலம் அவர்களைச் சமுதாயம் தனது கீழ்த்தரமான பார்வை கொண்டு பார்ப்பதைத் தவிர்க்க முடியும். அவர்களின் நலனில் அக்கறையுடைய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடமளிக்க வேண்டும். அத்துடன் அவர்களது புனர்வாழ்வு வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் மன உளைச்சலை ஓரளவிற்காகிலும் போக்க முடியும். இதில் அரசின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையில் இருதரப்பிற்குமிடையே இடம் பெறுகின்ற போரினால் அப்பாவிப் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமரவும் முடியும். இந்த செயற்பாடுகளை சர்வதேசக் கண்காணிப்பளர்கள், அமைப்புக்கள் ஊடாக உற்திப்படுத்த வேண்டும். இது இவ்வாறிருக்க நமது பங்கு என்ன? என்பதையும் நாம் சிந்தித்தல் வேண்டும். நிதியுதவி அளிப்பது ஒரு முக்கியமான செயலாகக் காணப்படுகிறது. ஆனாலும் அது மட்டும் போது என்று நினைத்து விட முடியாது. இவர்களது நிலைமைகளை புரிந்துணர்வோடு கருத்தில் கொண்டு நமது நேசக்கரங்களை நீட்ட வேண்டும். மனித நேயத்தைப் பெருக்கி மனநிறைவினை அவர்களிடம் ஏற்படுத்த நாம் அனைவரும் முன் வர வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இதனை உண்ர்ந்து செயற்பட நாட்டு மக்கள் அனைவரும் முன் வர வேண்டும்.