வெள்ளி, 22 ஜனவரி, 2010

தமிழா நீ பேசுவது தமிழா.....!


தமிழன் தன் தாய்மொழியைப் புகழ்ந்தான் - போற்றினான் - தலையில் வைத்துக் குதித்தான் - காப்பாற்றவில்லை.
சொந்த மொழி அழியப் போகிறதே என்னும் கவலை கொஞ்சமும் இன்றி வந்த
மொழிக்கெல்லாம் தமிழன் வாசல் திறந்தான்.

தமிழ் மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பது தெரிந்தும் தமிழன் பிற
மொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான்.

“வீட்டுக் கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும்
கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும்
கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ
ரிக்சாவில் தப்பி ஓடிய போது தகவல் அறிந்த பொலிஸ் ஏட்டு விரட்டி
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின”.

செய்தி ஏட்டில் ஒரு திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான்
என நினைக்கிறோம்.

ஆனால்........

தமிழா இது?

‘சாவி’ - போர்த்துக்கீசிய மொழி, ‘பீரோ’ - பிரெஞ்சு மொழி,
‘துட்டு’ - டச்சு மொழி, ‘கோணி’ - இந்தி மொழி, ‘பப்பாளி’ - மலாய் மொழி,
‘சப்போட்டா’ - யப்பானிய மொழி, ‘கொய்யா’ - பிரேசிலிய மொழி,
‘சுமார்’ - பெர்சிய மொழி, ‘வயது’ - சமஸ்கிருத மொழி,
‘கில்லாடி’ - மராத்தி மொழி, ‘ஆட்டோ’ - கிரேக்க மொழி,
‘ரிக்சா’ - யப்பானிய மொழி, ‘தகவல்’ - அரபி மொழி,
‘பொலிஸ்’ - இலத்தீன் மொழி, ‘ஏட்டு’ - ஆங்கில மொழி, ‘துப்பாக்கி’ -
துருக்கி மொழி, தோட்டா - உருது மொழி.

எந்த மொழியையும் தமிழன் எற்றுக் கொள்வான் என்பதற்கு இதை விடச்
சான்று தேவையில்லை.

இலங்கையிலும் தமிழன் மொழி இழந்து இனம் மாறிப் போனான் என்பதே வரலாறு. இலங்கை என்பது தூய தமிழ்ச்சொல். இலங்குதல் - ஒளி விடுதல்
என்பது தான் வேர்.

சிங்களவன் இன்று ‘லங்கா’ என இலங்கையை அழைக்கிறான். ‘லக்’ என்ற
வட மொழிச் சொல்லில் இருந்தே ‘லங்கா’ வந்தது என்கிறான் சிங்கள ஆய்வாளன்.

ஆனால்,

காலம் காலமாய்ச் சிங்களவர்களின் பெயர்களிலே ‘இலங்கை’ என்ற தூய தமிழ்ச் சொல் ஒட்டிக் கொண்டிருப்பதை எவருமே சுட்டிக் காட்டுவதில்லை.

இலங்கை ரத்னா, இலங்கை கோன் என்று சிங்களவர் பெயர்கள் உண்டே தவிர- லக்ரத்னா, லக்கோன் என்றோ சிங்களவர் பெயர்கள் உண்டா?

பைந்தமிழ் ஈழத்தில் - மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியமர்ந்த போர்த்துக்கீசர்க்ள் இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்த்துக்கீச மொழியிலேயே உரையாடுகிறார்கள்.

ஆனால்,

150 ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் தீவுக்குப் போன தமிழர்கள் தாய் மொழியாம் தமிழை முற்றிலுமாக மறந்து கிரியோல் மொழிக்காரர்களாய் ஆங்கில மொழிக்காரர்களாய் மாறிப் போனார்கள்.

காலையில் மகனைப் பார்த்து ‘பல்லை Brush பண்ணு’ என்கிறான். பின்பு ‘Body wash பண்ணு’ எங்கிறான். அப்புறம் ‘Tiffin பண்ணு’ என்கிறான். பிறகு ‘Dress பண்ணு’ என்கிறான். பின்பு ‘Ready பண்ணு’ என்கிறான். பின்பு பெரியவரை ‘Meet பண்ணு’ என்கிறான். பிறகு ‘அங்கேயே stay பண்ணிடாதப்பா - Return பண்ணிடு’ என்கிறான்.

இவர்கள் வாயில் பண்ணுதல் என்ற தமிழ்ச்சொல்லை விட்டால் தமிழ் இல்லை.

கடைத்தெருவில் இறங்கினால் ‘ லாண்டரி’, ‘ஏர் கட்டிங் சலூன்’, ‘ஓட்டல்’, ‘எலக்டிரிக்கல்ஸ்’, ‘டைலர்ஸ்’, ‘கம்பனி’, ‘டெக்ஸ்டைல்ஸ்’, இப்படி

நாளேடுகள் வார இதழ்கள் வாங்கப் போனால் ‘ஜுனியர் போஸ்ட்’, ‘இந்தியா ருடே’, ‘ரிப்போட்டர்’, ‘ஹெல்த்’ இப்படி

துணி வாங்கப் போனால் ‘பாண்ட்’, ‘சர்ட்’, ‘ஜீன்ஸ்’, ‘சாறி’, ‘ஜாக்கட்’ இப்படி

அலுவலகத்தில் நுழைந்தால் ‘டைரக்டர்’, ‘கிளார்க்’, ‘பியூன்’, ‘லாக்கர்’, ‘டிராயர்’, ‘பைல்’ ,

பள்ளிக்க்கூடம் போனால் ‘பிரின்சிபால்’, ‘டீச்சர்’, ‘ஸ்டூடன்ஸ்’, ‘கிளாஸ்’, ‘டெஸ்டு’, ‘றிசல்டு’, ‘பாஸ்’, ‘பெயில்’,

ஏதேனும் தொழில் பார்ப்போம் என்றால் ‘அப்பிளிக்கேசன்’, ‘இன்டர்வியூ’, ‘செலக்சன்’, ‘அப்பாயிண்ட்மெண்ட்’, ப்ரோமோசன்’,

விளையாடப் போனால் ‘கிரிக்கெட்’, ‘புட்பால்’, ‘டெனிஸ்’, ‘ஹாக்கி’, ‘செஸ்’,

நோய் வந்தால் ‘ஹாஸ்பிடல்’, ‘டாக்டர்’, ‘நர்ஸ்’, ‘சிஸ்டர்’, ‘ஆப்ரேசன்’ இப்படி

திரையுலகில் நுழைந்தால் ‘சூட்டிங்’, ‘அவுட்டோர்’, ‘இண்டோர்’, ‘கால்சீட்’, ‘மேக்கப்’, கட் கட் கட் இப்படி

முத்தமிழ் விழா மேடையில் கூட முதலில் முழங்குவது
‘மைக் டெஸ்டிங் ஒன் டூ திரீ!’

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருட வருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் ‘Beware of Dogs’ என்று ஆங்கிலத்தில் எழுதி வைக்கிறான் தமிழன்.

எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழியில் ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும்
‘Use Me’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் குப்பைத் தொட்டி கூட இன்று ஆங்கிலம் பேசும் தலைக்குனிவை யாரிடம் சொல்லி அழுவது.....?

இப்படி நாம் 85% க்கும் அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசும் மொழியை தமிழ் என்று அழைக்கலாமா? இது தமிழல்ல தமிங்கிலம். தமிழ்நாட்டில் எங்கும் தமிங்கிலம்........!

-தொடரும்....-

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சமாதானம் மலரவே பொங்கட்டும்.


போர்வெறி நீங்கவே பொங்கட்டும்
புத்துணர்வு கிடைக்கவே பொங்கட்டும்
போர் வெறி நீங்கவே பொங்கட்டும்
மத்தாப்பு வெடிக்கவே பொங்கட்டும்.

மகிழ்வுடன் வாழவே பொங்கட்டும்
ஒற்றுமையுடன் வாழவே பொங்கட்டும்
ஒரணி சேரவே பொங்கட்டும்
சித்தமெல்லாம் மகிழவே பொங்கட்டும்.

சீர்வாழ்வு வாழவே பொங்கட்டும்
பொங்கு தமிழன் கவி பாடிடவே பொங்கட்டும்
பூமியெங்கும் அமைதி நிலவிடவே பொங்கட்டும்
ஏற்றத்தாழ்வு இல்லாதொழியவே பொங்கட்டும்.

எங்களின் வாழ்வு செழிக்கவே பொங்கட்டும்
ஏர் பூட்டி மக்களெல்லாம் உழவு செய்திடவே பொங்கட்டும்
இன்றே எமக்கு விடிவு கிடைக்கவே பொங்கட்டும்
சர்க்கரையோடு தேன் பயறுஞ்சேர்த்து
மெத்தக் கலந்திங்கு பொங்கட்டும்.

புத்தரிசியோடு புதுப்பாலும் சேர்த்துப்
பொன் வெல்லப் பொங்கல் பொங்கட்டும்
பல் தொழில் பெருகி பல வளமும் பெருகவே
பாங்குடனே மக்களனைவரும் பொங்கட்டும்.

சண்டைகள் நீங்கிடவே பொங்கட்டும்
சாதிகள் ஒழிந்திடவே பொங்கட்டும்
சமரசம் நிலவிடவே பொங்கட்டும்
சமதர்மம் கிடைத்திடவே பொங்கட்டும்.

சக்தி பிறந்திடவே பொங்கட்டும்
சம உரிமை கிடைத்திடவே பொங்கட்டும்
புத்தி மிகுந்திடவே பொங்கட்டும்
பூமியில் மக்களனைவரும் அமைதியுடன் வாழவே பொங்கட்டும்
சகோதரத்துவம் நிலைத்திடவே பொங்கட்டும்
சாந்தியோடு சமாதனம் மலரவே பொங்கட்டும்.

சனி, 2 ஜனவரி, 2010

தமிழ்மொழி எம் தாய்மொழி


தமிழ்மொழி எங்கள் தாய்மொழி
தமிழ்மொழி ஒரு தனிமொழி
தமிழ்மொழி ஒர் அழகிய மொழி
தமிழ்மொழி எம் முதன் மொழி
தமிழ்மொழி ஒரு செம்மொழி
தமிழ்மொழி ஒர் இனிய மொழி
தமிழர் தொன்மைக்குச் சான்றான மொழி
தரணி போற்றிடும் தமிழ் மொழி.

இசையிலே இன்பம் கண்ட மொழி
எண் நுட்பங்கள் பல காணும் மொழி
ஓவியங்கள் பல காணும் மொழி
காவியங்கள் இயற்றும் மொழி
இயற்கை அன்னை அருளிய மொழி
இலக்கணங்கள் பல யார்த்த மொழி
இனிதான கலைகளை வளர்த்த மொழி
என்றுமே குறைவில்லாத சிறப்பு மொழி.

நினைத்தால் நெஞ்சினிக்கும் மொழி
சுவைத்தால் நாவினிக்கும் மொழி
கேட்டால் காதுவக்கும் மொழி
கேட்பவரைக் கொள்ளை கொள்ளும் மொழி
நல்ல சுகந்தரும் இதமான மொழி
தேனை நிகர்த்தினிக்கும் மொழி - எங்கள்
அமிழ்தினும் இனிதான தமிழ் மொழி.

உண்மை மிக்க நக்கீரனார் - நல்ல
உரை வகுத்த தமிழ் மொழி
ஊக்கமுள்ள வீரர் தம்மை
உருவாக்குகின்ற தமிழ் மொழி
வண்மை மிக்க பாண்டியன்
வளர்த்தெடுத்த செந்தமிழ் மொழி
பாராண்ட மைந்தர் நாம் - என்றென்றும்
விழா எடுக்கும் தமிழ் மொழி.

பொதிகை மலையிலே தோன்றிய மொழி
தென்னன் புகழிலே கிடந்த மொழி
சங்கப்பலகையில் இருந்த மொழி
வைகை ஏட்டிலே தவழ்ந்த மொழி
முச்சங்கம் கண்ட மொழி
மும்மன்னர் மடியிலே தவழ்ந்த மொழி
பேதை நெருப்பிலே நின்ற மொழி
கற்றோர் நினைவிலே நின்ற மொழி.

கம்பன் கவிபாடிய மொழி
சயங்கொண்டான் பரணி பாடிய மொழி
புகழேந்தி வெண்பா பாடிய மொழி
காடவன் கலம்பகம் பாடிய மொழி
ஓங்காப் புகழ் தொல்காப்பியன் இலக்கணம் யார்த்த மொழி
ஒளவையார் ஆத்திசூடி பாடிய மொழி
வள்ளுவன் குறளை வாய்மை பெற வைத்தமொழி
வாழ்க்கைக்கு நல்ல வளஞ்சேர்க்கும் மொழி.

தன் காலுக்கு சிலப்பதிகாரத்தை உடைய மொழி
தன் கைக்கு வளையாபதியை அணிந்த மொழி
தன் இடைக்கு மணிமேகலையை பூண்ட மொழி
தன் செவிக்கு குண்டலகேசியை பொருத்திய மொழி
உயிர் மெய் ஆய்தமுடன் இயங்கும் மொழி
குறிலும் நெடிலும் இசைந்தாடும் மொழி
வல்லினம் மெல்லினம் கொண்ட வனப்பு மொழி
வாழ்வை வளமாக்கிடும் எம் தாய் மொழி

அறிவியலுக்கும் அறைகூவல் விடுக்கும் ஆற்றல் மிக்க மொழி
மொழியியலுக்குச் சவால் விடுக்கும் திறன் மிக்க மொழி
வேற்றுமொழிகளுக்கும் சொற்கொடை அளித்த மொழி
பலகிளை மொழிகளுக்கு தாய் மொழி
இறைவன் தனித்திருந்து வளர்த்த மொழி
என்றும் அழியா தெய்வீகம் படைத்த மொழி
சொல் ஏர் உழவரின் நாவில் களிநடம் புரியும் மொழி
கால ஊழிக்கும் இயற்கையின் சீற்றத்துக்கும்
ஈடு கொடுத்து வாழும் மொழி.

சொல்வளம் பொருள்வளம் நிறைந்த மொழி
இயலும் இசையும் இனிய கூத்தும் உடைய மொழி
இளமையும் இனிமையும் இணைந்த தேன் மொழி
இலக்கணத்துக்கு தொல்காப்பியத்தைக் கொண்ட மொழி
அறநெறிக்குத் திருக்குறளைத் தந்த மொழி
முதற் குடிமக்கள் காப்பியத்தைப் படைத்த மொழி
நெற்றிக் கண்ணனுக்கும் குற்றம் வரைந்த மொழி
நீடூழி காலங்கள் தமிழ்ப்பணி செய்ய வைத்த மொழி
தமிழே நீ என்றென்றும் வாழ்க வளர்கவே.

வியாழன், 24 டிசம்பர், 2009

வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!


அழியாத அன்பொன்றே நட்பு
அன்பான புரிதல் தானே நட்பு
களங்கமில்லாத அன்பே நட்பு- அதைக்
காதலித்தால் வாழ்வே பொற்பு.

காலமெல்லாம் எமை இணைக்கும் நட்பு
கைகோர்த்துக் கடைந்தேறும் நட்பு
மனச்சுமையை இறக்கி வைக்கும் நட்பு
மாசில்லா உந்தன் நெஞ்சு தான் என் தெம்பு.

உள்ளத்து உணர்வொன்றே நட்பு
உயிரெல்லாம் கலந்ததுவே உன் நட்பு
வெள்ளம் போல் வரும் வேதனையை
விடியலாக்கித் தருமந்த நட்பு.

விளைகின்ற பயிராக வளர்கின்றதே உன் நட்பு
வாசமுள்ள பூவெல்லாம் பேசுமுந்தன் நட்பு
வளர்பிறையாய் வளருமா எம் நட்பே!

திங்கள், 9 நவம்பர், 2009

போர்க்காலச் சூழ்நிலையில் பாதிப்புற்றோருக்கு உதவுதல்



எமது இன்றைய போர்க்காலச் சூழ்நிலையில் சொந்த மண்ணிலேயே அனாதைகள் ஆக்கப்பட்டு உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, ஆதரிக்க உறவினர் இன்றி அல்லற் படுவோரே பாதிக்கப்பட்டவர்கள் என்ற பார்வைக்கு உட்படுகின்றனர். இவ்வண்ணம் கஷ்டப்படுவோருக்கு உதவுதல் எமது எல்லோருக்கும் உரிய தலையாய கடமையாகும். ஆனால் எமது மண்ணில் இருக்கும் பல மக்களுக்குத் தமது பொறுப்புக்கள் பற்றி உணர முடிவதில்லை. ஏதோ தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருந்து விடுகின்றனர். எமது உடன் பிறப்புக்களுக்கு நாம் உதவாவிட்டால் யார் உதவுவது?
பாதிப்புற்றோருக்கு உதவுவதற்காக இன்று நமது நாட்டில் பல அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவ்வமைப்புக்களால் தனித்து நின்று பாதிப்புற்ற மக்களுக்கு உதவ முடியாது. ஆகவே எம் மண்ணின் மைந்தர்கள் தான் அவர்களின் தோளோடு தோள் நின்று உதவ முன் வர வேண்டும். துள்ளி விளையாடித் திரியும் இளம் நெஞ்சங்கள் பயிலும் பாடசாலைகளில் கருத்தரங்குகளை நடத்துவதன் மூலமோ, பொது இடங்களில் கூட்டங்களை வைப்பதன் மூலமோ பாதிப்புற்றோரின் அவலங்களையும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய உதவிகளையும் பற்றி பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாதிப்புற்றோருக்கு உதவும் வழிவகைகள் ஆவன :
அவர்களுக்கு உலர் உணவு வகைகளைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆணைப்பசிக்கு சோள்ப் பொரியேனும் நாம் கொடுக்கலாம். இருக்க உறையுள் இன்றி கஷ்டப்படுவோருக்கு குடில்கள், கொட்டகைகள் அமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியும். படிக்க மனம் இருந்தும் தமது கல்வியைத் தொடர முடியாமல் அல்லல்படும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைச் சேகரித்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் அறிவுப் பசியை ஓரளவிற்காவது தீர்க்க முடியும்.

பாதிக்கப்பட்டவர்களினுடைய துன்பங்களில் பங்கெடுப்பதன் மூலம் அவர்களைச் சமுதாயம் தனது கீழ்த்தரமான பார்வை கொண்டு பார்ப்பதைத் தவிர்க்க முடியும். அவர்களின் நலனில் அக்கறையுடைய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல இடமளிக்க வேண்டும். அத்துடன் அவர்களது புனர்வாழ்வு வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் மன உளைச்சலை ஓரளவிற்காகிலும் போக்க முடியும். இதில் அரசின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையில் இருதரப்பிற்குமிடையே இடம் பெறுகின்ற போரினால் அப்பாவிப் பொது மக்கள் பாதிக்கப்படும் நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமரவும் முடியும். இந்த செயற்பாடுகளை சர்வதேசக் கண்காணிப்பளர்கள், அமைப்புக்கள் ஊடாக உற்திப்படுத்த வேண்டும். இது இவ்வாறிருக்க நமது பங்கு என்ன? என்பதையும் நாம் சிந்தித்தல் வேண்டும். நிதியுதவி அளிப்பது ஒரு முக்கியமான செயலாகக் காணப்படுகிறது. ஆனாலும் அது மட்டும் போது என்று நினைத்து விட முடியாது. இவர்களது நிலைமைகளை புரிந்துணர்வோடு கருத்தில் கொண்டு நமது நேசக்கரங்களை நீட்ட வேண்டும். மனித நேயத்தைப் பெருக்கி மனநிறைவினை அவர்களிடம் ஏற்படுத்த நாம் அனைவரும் முன் வர வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. இதனை உண்ர்ந்து செயற்பட நாட்டு மக்கள் அனைவரும் முன் வர வேண்டும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

சுதந்திரம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்- நாம்
அடிமையாக வாழ்ந்து விட்டோம்?
இன்னும் எத்தனை ஆண்டுகள்- நாம்
இருட்டில் வாழப் போகின்றோம்?
உயிரைக் காத்து என்ன பயன்?- நாம்
உலகில் வாழ்ந்து மடிவதனால்
எரியும் சாம்பல் தான் மிஞ்சும்- நாம்
ஏற்றம் காண்பதெப்போது?

அடிமையாக வாழ்வதை விட - நாம்
ஆயிரம் படிகள் தாண்டிடுவோம்!
இறைவன் என்பவன் இருக்கும் வரை - நாம்
இன்பம் என்றும் எய்திடுவோம்.
உலகில் காணும் கலைகளை- நாம்
ஊக்கத்தோடு கற்றிடுவோம்.
எளிமை கண்டு இரங்கிடுவோம்- நாம்
ஏற்றம் என்றும் அடைந்திடுவோம்.

அமைதி கொண்டே என்றும்- நாம்
அடிமைப் பேயை ஓட்டிடுவோம்!
இளமை இருக்கும் போதே- நாம்
இழிவு நிலையை நீக்கிடுவோம்.
உணர்ச்சி கொண்டு பொங்கியே- நாம்
உழைப்பை நன்கு வளர்த்திடுவோம்.
ஏழை எளியவர்க்கெல்லாம்- நாம்
எழுதிக் கற்றுக் கொடுத்திடுவோம்.

அகிலம் என்ற அவனியிலே- நாம்
அடிமைத் தீயைப் போக்கிடுவோம்.
இழைக்கும் துயர்கள் யாவற்றையும்- நாம்
இன்பத்தோடு போக்கிடுவோம்.
உழைக்கும் கரங்கள் அவற்றை- நாம்
ஊழி வரை காத்திடுவோம்
எழுதும் கரங்கள் அவற்றை- நாம்
ஏற்றதிற்குக் கொண்டு செல்வோம்.

“சுதந்திரம் ! சுதந்திரம் !” என்றே- நாம்
சுதாகரித்து எழுந்திடுவோம்.
சுற்றமுஞ் சூழலும் இன்புறவே- நாம்
சுகமும் வாழ்வும் கண்டிடுவோம்.
சரித்திரம் ஒன்று படைத்திடுவோம்- நாம்
சாதி வேற்றுமையை ஓழித்திடுவோம்.
சுதந்திர நாட்டை உருவாக்கவே- நாம்
“சுதந்திரம்” என்ற குரல் எழுப்பிடுவோம்!

வெள்ளி, 2 அக்டோபர், 2009

தீர்வு ஒன்று தந்திடு தீபத் திருநாளே.....


அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீபஒளி ஏற்றிடும் தீபத்திருநாளே!

சிந்தையிலே உன்னைப் போற்றுகின்றோம்

சித்தமும் மகிழ்ந்து செல்வமும் செழித்து

நித்தமும் எம் வாழ்வு நிம்மதியாய் மகிழ்ந்திடவே

தீபத் திருநாளே எமக்குச் சீர்வழி செய்திடுவாய்

திடமான வாழ்வு தினமிங்கு நிலைக்க

திக்கெல்லாம் நம்புகழ் தித்தித்து ஒலிக்க

தீர்வொன்று எமக்குத் தந்திடுவாய்!

அண்டை அயலவர் சுற்றமெல்லாம்

அவனியில் சிறப்பாய் வாழ்ந்திடவும்

சண்டைகள் யாவும் ஒழிந்து

சமாதானம் சமரசம் நிலவிடவும்

பாரினில் தமிழர் தங்கள்

பண்டைய வரலாற்றுப் பெருமையுடன்

பண்பாட்டுப் புகழும் உரிமைகளும்

பரப்பியே இங்கே வாழ்ந்திடவும்

பட்ட துன்பங்கள் பறந்தோட வேண்டி

பாரில் இன்பம் கொண்டு வாராய்!

அவனியில் தமிழர் எங்கள்

அவலங்கள் யாவும் அகன்றிட

மலர்ந்திடுவாய் தீபத் திருநாளே!

அகதிகள் அனாதைகளாய்

அவதியுறும் அனைவருக்கும்

அல்லல்கள் அறவே நீங்கி - எமக்கு

ஆறுதல் பல கிடைத்திட வா தீபத்திருநாளே!

அற்ப சுகங்களின் அழுக்கை அறுத்தெறிந்த பின்பு

அஞ்சுதல் எதுவுமின்றி அச்சமும் பயமும் இன்றி

அகிலத்தில் ஆனந்தமாய் நாம் வாழ

அன்புடன் அலர்ந்திடு தீபத் திருநாளே!